Tamilnadu

பெரம்பலூரில் சோகம் : விவசாய நடவுக்கு வைத்திருந்த 350 கிலோ சின்ன வெங்காயத்தைத் திருடிய திருடர்கள் !

தமிழகம் மட்டுமில்லாது நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. மஹாராஷ்டிரா உள்ளிட்ட வெங்காயம் அதிகளவில் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் பெய்த கனமழையே வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

பெரிய வெங்காயத்தை தொடர்ந்து சின்ன வெங்காயத்தின் விளையும் அதிகரித்துள்ளது. ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை140 ரூபாய்க்கும், ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் விலை 180 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது. வெங்காய விலை ஏற்றத்தால் உணவகங்களில் உணவுப்பண்டங்களின் விலையும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், பெரம்பலூர் அருகே நடவுப்பணிக்கு வைத்திருந்த 350 கிலோ வெங்காயத்தை திருடிச் சென்றதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: வெங்காயத்தின் விலை வரலாறு காணாத உயர்வு : அதிகரிக்கும் உணவுப்பண்டங்களின் விலை!

பெரம்பலூர் மாவட்டம், கூத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன். விவசாயியான இவர் நடவுப்பணிக்காக 1500 கிலோ வெங்காயத்தை வாங்கி தோட்டத்தில் வைத்துள்ளார்.

இந்நிலையில், வயலில் விதைப்புக்காக வைத்திருந்த சின்ன வெங்காய மூட்டைகளில் இருந்து ஆறு மூட்டைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். திருடு போன வெங்காயத்தின் மதிப்பு சுமார் 50 ஆயிரம் ரூபாய் இருக்கும் என முத்துக்கிருஷ்ணன் தெரிவித்தார்.

இதனையடுத்து, பாடாலூர் காவல் நிலையத்தில் விவசாயி முத்துக்கிருஷ்ணன் புகார் மனு அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில், வெங்காயத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலிஸார் தேடி வருகின்றனர்.

சின்ன வெங்காயம் கிலோ 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், மர்ம நபர்களால் 350 கிலோ வெங்காயம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.