Tamilnadu

மெரினா துப்பாக்கிச்சூடு நினைவு தினம் அனுசரிப்பு- உரிமைகளைப் பறிக்கிறது அரசு என மீனவ மக்கள் குற்றச்சாட்டு!

மெரினா துப்பாக்கிச்சூடு நினைவு தினம் இன்று அயோத்திகுப்பத்தில் அனுசரிக்கப்பட்டது.

நினைவு சின்னத்திற்கு நடுக்குப்பம், அயோத்தி குப்பம், நொச்சிக்குப்பம் ஆகிய பகுதிகளிலிருந்து மீனவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

1983ம் ஆண்டு மெரினா கடற்கரையை, உலக வங்கி நிதியுதவியோடு அழகுபடுத்தும் திட்டம் ஒன்றைக் கொண்டு வந்தார் அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அதற்காக மெரினாவை ஒட்டிய மீனவர் குப்பங்களை காலி செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக, மீனவர்களின் வலை, கட்டுமரங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை முன்னறிவிப்பின்றி சென்னை மாநகராட்சி அகற்றியிருக்கிறது. ஆனால், மீனவர்கள் இடத்தை விட்டுக் கொடுக்கத் தயாரில்லை.

இதையடுத்து, மீனவர்களின் வீடுகளுக்குள் புகுந்த காவல்துறையினர், மீனவர்களை துவம்சம் செய்தனர். எதிர்த்த மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் பல மீனவர்கள் பலியாகினர்.

உயிர்நீத்த மீனவர்கள் நினைவாக நினைவுச் சின்னம் அமைத்து இன்று 34ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து, 34 ஆண்டுகள் ஆகியும் பாரம்பரிய மீனவர்களுக்கு கட்டுமரங்கள், ஃபைபர் படகு போன்ற உபகரணங்களை வைக்க எந்த அடிப்படை உரிமையும் இல்லை என அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.

“இத்தனை வருடங்களாகப் போராடி வருகிறோம். தற்போதும் சென்னை மாநகராட்சி பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் உரிமைகளையும் பறிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது” என அப்பகுதி மக்கள் தங்கள் உள்ளக் குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர்.

Also Read: சென்னை மெரினா கடற்கரையில் மலைமலையாக ஒதுங்கும் நுரை... காரணம் என்ன?