Tamilnadu

கோவை சிறுமி பாலியல் கொலை குற்றவாளி மனோகரனுக்கான தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு!

கோவையில் பள்ளிக்குழந்தைகளை கடத்தி கொலை செய்த வழக்கில் மனோகரனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறைவேற்ற பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையில் 10 வயது சிறுமியையும், 7 வயது சிறுவனையும் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, கொலை செய்த வழக்கில் மனோகரன் என்பவருக்கு கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம், தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்த தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதி செய்த நிலையில், சமீபத்தில் உச்சநீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்தது. உச்சநீதிமன்றம், தண்டனையை உறுதி செய்ததை அடுத்து, மனோகரனை டிசம்பர் 2ம் தேதி தூக்கிலிடும்படி, கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

தூக்கிலிடும்படி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மனோகரன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆளுநருக்கு கருணை மனு அனுப்ப அவகாசம் வழங்காமல், தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மனோகரன் தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ், டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மனோகரனை தூக்கிலிடும்படி கோவை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இந்த மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Also Read: மனோகரனுக்கு தூக்கு தண்டனை உறுதி : கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி!