Tamilnadu

வாங்கிய கடனை அடைக்க ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்த வாலிபர்!

சென்னை ஜெ.ஜெ. நகர் 10வது ப்ளாக்கில் தனியார் வங்கி ஒன்றும் அதன் ஏ.டி.எம் மையமும் இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்த வாலிபர் ஒருவர், ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றுள்ளார்.

அப்போது மும்பையில் உள்ள அந்த வங்கியின் தலைமை கட்டுப்பாட்டு அலுவலகத்தில் அபாய மணி ஒலித்துள்ளது. இதனையடுத்து வங்கி ஊழியர்கள், உடனடியாக ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், ஏ.டி.எம் மையத்திற்குள் வாலிபர் ஒருவர் கையில் கடப்பாரை, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஏ.டி.எம் எந்திரத்தை உடைப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் அந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். அந்த வாலிபரிடம் போலிஸாரிடம் நடத்திய விசாரணையில், அவர் தருமபுரி மாவட்டம் அரூரை சேர்ந்த சிலம்பரசன் என்பது தெரிய வந்தது.

மேலும், டிப்ளமோ படித்துள்ள சிலம்பரசன் தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வந்துள்ளான். ஆனால், அவருக்கு போதிய சம்பளம் கிடைக்காததால் சென்னை நெற்குன்றத்தில் அரிசி கடை ஒன்றை நடத்தி வந்துள்ளான்.

அரிசிக்கடையில் 6 லட்சத்திற்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது, இதனால் கடன்சுமை அதிகமாகியுள்ளது. வாங்கியக் கடனை எவ்வாறு அடைப்பது என்று யோசித்து வந்த அவர், ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடித்து கடனை அடைத்து விடலாம் என முடிவு செய்ததாக கூறியுள்ளான்.