Tamilnadu

’மருத்துவர்கள் மீதான பழி வாங்கும் நடவடிக்கையை கைவிடுங்கள்’ - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் குட்டு !

பதவி உயர்வு, மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த அக்டோபர் மாதம் வேலைநிறுத்தப் போராட்டத்தில் அரசு மருத்துவர்கள் ஈடுபட்டனர்.

அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் போராட்டத்தைக் கைவிட்டனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்களை பணியிடை மாற்றம் செய்யும் உத்தரவிற்கு தடை விதிக்க கோரி சென்னையை சேர்ந்த அரசு மருத்துவர் பாலசுப்ரமணியம் உள்ளிட்ட எட்டு மருத்துவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

Also Read: மருத்துவர்களின் போராட்டம் எதற்காக ? உண்மையான கோரிக்கைகள் என்ன ? - ஒரு மருத்துவரின் உண்மைப் பதிவு

இந்த வழக்கு இன்று நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் பணிக்கு திரும்பி விட்ட நிலையில் அவர்களை பணியிட மாற்றம் செய்யும் உத்தரவை அரசு திரும்ப பெறவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு நிறுத்த வேண்டும் என்று தெரிவித்த நீதிபதி, விசாரணையை நவம்பர் 26ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.