Tamilnadu

“ஆளுங்கட்சியின் துணையோடு வணிகர்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் அட்டூழியம்” - சென்னை கமிஷனரிடம் புகார்!

வணிகர்களை மிரட்டி பணம் பறிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என காவல் ஆணையரிடம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா புகார் அளித்துள்ளார்.

சமீபத்தில், சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல நகைக்கடையில் போலி தங்க நகை விற்பனை செய்வதாக உரிமையாளரை மிரட்டி 15 லட்ச ரூபாய் பெற்றுக்கொண்டதோடு, ஒரு கோடி ரூபாய் கேட்டு தகராறு செய்த அ.தி.மு.க பிரமுகர், போலி பத்திரிகையாளர் மற்றும் 5 வழக்கறிஞர்கள் உள்ளிட்ட கும்பலை போலிஸார் கைது செய்தனர்.

இந்நிலையில், இதுகுறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனை நேற்று நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா. அந்த மனுவில், “சென்னை தி.நகரில் நகைக்கடை உரிமையாளரை மிரட்டி பணம் பறித்த 10 பேர் கும்பலை கைது செய்த காவல்துறையினருக்கு பாராட்டுகள்.

சமீபகாலமாக சென்னையில் உள்ள முக்கிய வணிக நிறுவனங்களையும் வணிகர்களையும் குறிவைத்து பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், மனித உரிமை துறை நிர்வாகிகள் என்று போலியான அடையாள அட்டை வைத்துக்கொண்டும் தங்கள் வாகனங்களில் அதற்குரிய ஸ்டிக்கர்களை ஒட்டிக்கொண்டும் கும்பலாக சென்று மிரட்டுவதும், பணம் பறித்து வருவதும் தொடர்ந்து வருகிறது.

இதனால் வணிகர்கள் மிகுந்த அச்சத்துடன் வியாபாரம் செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இக்கும்பல்களின் செயல்களால் வணிகர்களின் பாதுகாப்பும், வழக்கறிஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் கண்ணியமும் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, இதுபோன்ற சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.