Tamilnadu

“கஜா புயலால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீட்டுத் தொகை எங்கே?” - ஒப்பாரி போராட்டம் நடத்திய விவசாயிகள்!

வேதாரண்யம் அருகே கஜா புயலால் பாதிக்கப்பட்ட பயிருக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி விவசாயிகள் ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஆண்டு இதே நாளில் வீசிய, ‘கஜா’ புயல், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்களை புரட்டியெடுத்தது. கஜாவில் சிக்கிச் சிதைந்த விவசாயிகள் ஓராண்டாகியும் இன்னும் மீண்டெழவில்லை.

விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரமாக இருந்து வந்த தென்னை, மா, பலா உள்ளிட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. நடவு செய்யப்பட்டிருந்த பயிர்கள் முழுவதும் மழை வெள்ளத்தில் மடிந்துபோயின. 88,102 ஹெக்டேரில் பயிரிடபட்டிருந்த பயிர்கள் சேதமடைந்தன.

இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆதனூர் கடைவீதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பயிருக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி காவிரி தமிழ் தேச விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரி தமிழ் தேச விவசாயிகள் சங்கத் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

கஜா புயல் கடந்து ஓராண்டாகியும் வீடு இழந்தவர்களுக்கு மாற்று வீடு வழங்காமலும், பெரும் பயிர்சேதத்தை சந்தித்த விவசாயிகளுக்கு முழுமையாக இழப்பீட்டு தொகை வழங்காமல் ஏமாற்றுவதாகவும் கூறி விவசாயிகள் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.