Tamilnadu

திருவள்ளுவர் சிலை மீது கருப்பு மை - பா.ஜ.க மீது நடவடிக்கை தேவை : முத்தரசன் ஆவேசம்

தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலை மீது மர்ம நபர்கள் மாட்டு சாணத்தை வீசி அவமதித்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திருவள்ளுவர்க்கு எதிரான தாக்குதல்கள் தொடர்வது மிகக் கடுமையான கண்டனத்திற்குரியது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, “திருவள்ளுவரும், அவர்தம் திருக்குறளும் கடவுள், சாதி, மதம், அரசியல் கடந்த பொதுமறையாகும்.

உலக மொழிகள் அனைத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்ட திருக்குறள், ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் தங்களின் வாழ்க்கையை நெறிப்படுத்தும் நூலாக ஏற்றுக் கொண்ட மகத்தான நூல்.

அத்தகைய நூலை வழங்கிய மகத்தான பேரறிஞர் வள்ளுவர்க்கு காவி உடைதறித்து திருநீர் இட்டு, தமிழக பா.ஜ.க.வினர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அவர்கள் மீது தமிழக அரசு தயக்கமின்றி உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.

இதன் தொடர்ச்சியாக, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிக்கப்பாளர் அலுவலகங்கள் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில், கம்பீரமாக காட்சியளித்த திருவள்ளுவர் சிலையின் முகத்தில் சாணத்தை வீசியும், அவரது இரு கண்களை மூடியும், கறுப்புச் சாயத்தை பூசியும் மிருக கூட்டம் இழிவுபடுத்தியுள்ளது மிக, மிகக் கடுமையான கண்டனத்திற்குரியது.

இச்செயல் வேண்டுமென்றே திட்டமிட்டே உள்நோக்கத்துடன் நடத்திட்ட செயலாக கருதப்படுகின்றது. இழிவு நிறைந்த இச்செயல்புரிந்த கொடியவர்கள் யார் என்பது கண்டறிந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு, சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும். தமிழ்நாடு அரசும், காவல்துறையும் பாரபட்சமற்ற, நேர்மையான முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்" என அதில் தெரிவித்துள்ளார்.