Tamilnadu

’சுஜித் மீட்புப் பணிக்கு 11 கோடி செலவானது என்பது வதந்தி’ : திருச்சி மாவட்ட ஆட்சியர் விளக்கம்

கடந்த வெள்ளிக்கிழமை அன்று திருச்சி மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறுதலாக விழுந்த 2 வயது சிறுவன் சுஜித்தை உயிருடன் மீட்கும் முயற்சி கடந்த 80 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. ஆனால், மீட்புப் பணிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்ததால், சிறுவன் சுஜித் உயிரிழந்தான்.

சுர்ஜித்தின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக குழந்தை வைக்கப்பட்டு மணப்பாறை கரட்டுப்பட்டி அருகே பாத்திமாபுதூரில் உள்ள கல்லறைத் தோட்டத்தின் குழந்தை சுஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. சுஜித் மீட்பு பணிகளுக்காக 11 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல்கள் வலம் வந்தன.

திருச்சி ஆட்சியர் சிவராசு

இதற்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், சுஜித் மீட்பு பணிகளுக்கான செலவு குறித்து பரவும் செய்திகள் பொய் என்று திருச்சி ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''மணப்பாறை அருகே வேங்கைக்குனிச்சி கிராமம் நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்க இயக்கப்பட்ட வாகனங்களுக்கு செலவுத் தொகை கொடுக்கப்படவில்லை.

வாகன உரிமையாளர்கள் வேண்டாம் என்று மறுத்து விட்டனர். இயந்திரங்களுக்கு டீசல் செலவு மட்டுமே ஆனது. மீட்புப் பணிக்காக 5 ஆயிரம் லிட்டர் டீசல், ₹ 5 லட்சம் மட்டுமே செலவாகியது. ஆனால், அதிக செலவானதாக வாட்ஸ்அப்பில் பரப்பப்படும் பொய் செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். பொய் செய்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என தெரிவித்துள்ளார்.