Tamilnadu

ப்ளாஸ்டிக் பயன்பாட்டை தட்டிக் கேட்ட போலிஸை மிரட்டிய ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் : கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்

சென்னை புதுப்பேட்டைப் பகுதியில், ஆயுதப்படை காவலர் சரவணன் என்பவர், அப்பகுதியிலிருந்த தனியார் ஹோட்டல் ஒன்றுக்கு நேற்று இரவு உணவருந்த சென்றுள்ளார். அங்கு 2 கல் தோசைகளை ஆர்டர் செய்துவிட்டு உணவுக்காக காத்திருந்தார். அப்போது, வாழை இலைக்குப் பதில் பிளாஸ்டிக் கவரில் உணவு பரிமாறப்பட்டுள்ளது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஆயுதப்படை காவலர் சரவணன், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளைக் கொண்டு உணவுகளை ஏன் வழங்குகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு அந்த ஹோட்டல் உரிமையாளரும், அங்கு இருந்த ஆர்.எஸ்.எஸ் பிரமுகரும் முறையான பதிலேதும் அளிக்காமல், மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசியுள்ளனர். இதனை ஆயுதப்படை காவலர் சரவணன் தனது மொபையில் கேமராவில் அந்த நிகழ்வைப் படமாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து எழுந்த புகாரின் அடிப்படையிலேயே இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இந்த சோதனையில் உணவகத்தில் சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதும், நெகிழிப் பைகள் பயன்படுத்தப்படுவதும் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கடை உரிமையாளருக்கு 1000 ரூபாய் அபராதம் விதித்ததோடு கடையைப் பூட்டி சீல் வைத்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி வாசுதேவன், இதுபோன்ற சுகாதாரமற்ற உணவுப் பொருட்களையோ, நெகிழிப் பைகளையோ பயன்படுத்தும் உணவகங்கள் குறித்து பொதுமக்கள் தங்களிடம் புகார் அளிக்கலாம் எனவும், புகாரை தெரிவிக்க 94440-42322 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் கூறினார்.