Tamilnadu

’எடப்பாடிக்கு எதுக்கு டாக்டர் பட்டம் ?’ : மிகவும் வெட்கக்கேடான செயல் - நீதிமன்றத்தில் கொதித்த முகிலன்

திருச்சி மத்திய சிறையில் இருக்கும் சமூக செயற்பாட்டாளர் முகிலன் மீது, பெண் அளித்துள்ள பாலியல் வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் இன்று கரூர் நீதிமன்றம் 1-ல் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கை விசாரித்த கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜய் கார்த்திக், அடுத்த மாதம் 5-ம் தேதி முகிலனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

பிறகு மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லும் போது நீதிமன்ற வளாகத்தில் கோஷமிட்ட முகிலன், எடப்பாடிக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது வெட்கக்கேடானது. கொடுத்த பட்டத்தை திரும்பப் பெற வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும், பவளப்பாறை திருடப்படுவதை பாதுகாக்கப்பட வேண்டும் என போராடிய சமூகப் போராளி திருமுருகனை கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார்.

மேலும், அலிபாபாவும் 40 திருடர்களும் போல, எடப்பாடியும், பன்னீர்செல்வமும், அ.தி.மு.க அமைச்சர்களும் கொள்ளை அடித்து வருவதாக சீமான் குறிப்பிட்டுள்ளார். உண்மையில், அவர்கள் 40 திருடர்கள் அல்ல, 40 கொள்ளையர்கள். நாள் ஒன்றுக்கு ரூ.300 கோடி அளவில் ஊழல் செய்து வருகின்றனர் என்று குறிப்பிட்டார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.