Tamilnadu
“மின் இணைப்பு கட்டண உயர்வு மக்களின் சுமையை அதிகரிக்கும்” : கட்டண உயர்வை திரும்பப்பெற சிபிஐ வலியுறுத்தல்!
தமிழக அரசு எந்தவித முன் அறிவிப்புமின்றி திடீரென மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதற்கு அரசியல் கட்சியினர் மற்றும் ஜனநாயக அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தைக் திரும்பப் பெறவேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசு பின்பற்றும் மக்கள் விரோத பொருளாதார கொள்கையின் காரணமாக மக்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி அவதிப்பட்டு வருகின்றனர்.
வேலையின்மை அதிகரித்துள்ள நிலையில் மத்திய அரசின் கொள்கைகள் காரணமாக மோட்டார் வாகன தொழில் உட்பட பல்வேறு தொழில்கள் தொடர்ந்து மூடப்பட்டு லட்சக்கணக்கில் தொழிலாளர்கள் வேலை இழந்து வருகின்றனர். விலைவாசியை கட்டுப்படுத்திட உறுதியான எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாத காரணத்தால் விலைவாசி தொடர்ந்து உயர்ந்து கொண்டே உள்ளது.
வெங்காயத்தைத் தொடர்ந்து பூண்டு உள்ளிட்ட பொருட்களும் விலை உயர்ந்து வருகின்றன. அண்மையில் சமையல் எரிவாயு விலை திடீர் என ரூ.13.50 உயர்த்தப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தல் வரை கட்டுக்குள் வைக்கப்பட்ட பெட்ரோல் - டீசல் விலை தேர்தல் முடிவிற்குப் பின்னர் தினந்தோறும் தங்க விலைபோல் உயர்ந்து கொண்டே இருக்கின்றது.
இதன் விளைவாக அத்தியாவசிய பண்டங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலைகளும் போட்டி போட்டு உயர்ந்துகொண்டே இருக்கின்றன. பால் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் விலை என்ற பெயரால் ஒரு லிட்டர் பால், எருமை - பசும்பால் என்று வேறுபாடு இன்றி லிட்டருக்கு ரூ.6 உயர்த்தி பொதுமக்களை வஞ்சித்தது அரசு.
இத்தகைய நெருக்கடிகளை மத்திய - மாநில அரசுகள் மக்களுக்கு தொடர்ந்து கொடுப்பது போதாது என்று, தற்போது தமிழ்நாடு அரசு மின் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தி இருப்பது கண்டனத்திற்குரியதாகும். கட்டண உயர்வு குறித்து மின்வாரியம் இணைய தளத்தில் வெளியிட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
எல்.டி.சர்வீஸ் (தாழ்வு அழுத்த மின்இணைப்பு) வீடுகளுக்கு சிங்கிள் ஃபேஸ் இணைப்பு பெறுவதற்கான கட்டணம் ரூ.250 என்பது ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 3 ஃபேஸ் இணைப்பு கட்டணம் ரூ.500 என்பது ரூ.750 முதல் ரூ.1000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. பொது குடிநீர் இணைப்பு, பொது பயன்பாட்டிற்கான விளக்குகளுக்கு ரூ.250 என்பது ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதே பிரிவில் 3 ஃபேஸ் இணைப்பிற்கு ரூ.500 என்பது ரூ.750 முதல் ரூ.1000 உயர்த்தப்பட்டுள்ளது.
கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தளங்கள், கைத்தறி மற்றும் தொழில்களுக்கான கட்டணங்களும் பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான கட்டணம் ரூ.500 முதல் ரூ.1000 வரை உயர்த்தப்பட்டுள்ளன.
குடிசைத் தொழில், விசைத்தறி தொழிற்சாலை என அனைத்தின் மின் கட்டணங்களும் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு மேலும் மேலும் சுமையை அதிகரிக்கும் மின்கட்டண உயர்வை அரசு திரும்பப் பெற வேண்டும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
”இந்த திட்டத்தில் கை வைத்தால் த.வெ.க அரசின் கதை முடிந்தது” - CPM செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!
-
பொய்யிலே பிறந்து... பொய்யிலே புரண்டு... : விஜயின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!
-
“தந்தை பெரியார், அம்பேத்கர் பெயர் நீக்கம் என்பது ஒரு திட்டமிட்டச் செயல்!”: மு.வீரபாண்டியன் கடும் கண்டனம்!
-
“மரியாதையும், பாதுகாப்பான கல்விச்சூழலும் கிடைப்பது குழந்தைகளின் உரிமை!” : கனிமொழி எம்.பி!
-
கிரிக்கெட் விளையாட்டு : பந்து தலையில் தாக்கி 11 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம் - காஞ்சியில் அதிர்ச்சி!