Tamilnadu
மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதித்த தமிழக அரசு - பொதுமக்கள் கடும் அதிருப்தி!
தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் வருகிற அக்டோபர் 11 முதல் 13ம் தேதி வரை பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்து இரு நாட்டு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
அப்போது, மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலாத் தளங்களான ஐந்து ரதம், கடற்கரை கோவில் உள்ளிட்ட பகுதிகளையும் சுற்றிப்பார்க்க உள்ளனர். இதனால் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே மாமல்லபுரத்தில் கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டு, வாகன ஓட்டிகளிடம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதுமட்டுமல்லாமல், மோடி, ஜி ஜின்பிங் சந்திப்பு நடைபெறுவதால் மாமல்லபுரத்தில் இருந்த சாலையோரக் கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளது. இதனால் கடை உரிமையாளர்கள் கடுமையான சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
அதேபோல், அக்டோபர் முதல் வாரத்தில் இருந்தே மாமல்லபுர கடற்பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் அன்றாட பிழைப்பின்றித் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்றோடு சேர்த்து எதிர்வரும் 4 நாட்களும் தொடர் விடுமுறை என்பதால் மக்கள் சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல விரும்புவார்கள். அந்த வகையில் மாமல்லபுரம் செல்லவும் திட்டமிட்டிருப்பார்கள்.
இப்படி இருக்கையில், மோடி, சீன அதிபரின் சந்திப்பு நிகழவுள்ளதால் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் வருவதற்கும் தடை விதித்துள்ளது தமிழக அரசு. பாதுகாப்பு அம்சங்களை சுட்டிக்காட்டி இவ்வாறு தெரிவித்துள்ளது.
மேலும், சாதாரண நாட்களில் பொதுமக்கள் புகார் அளித்தாலும் சாலைகளை சீரமைக்காத தமிழக அரசு தற்போது மோடியின் வருகைக்காக மாமல்லபுரம் செல்லும் வழியில் உள்ள சாலைகளை சீரமைக்கவும், பராமரிக்கவும் உத்தரவிட்டுள்ளது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், சீன அதிபர் மற்றும் மோடியை வரவேற்க வழிநெடுக பேனர் வைக்க முயற்சிக்கும் அ.தி.மு.க அரசின் நடவடிக்கைக்கு எதிராக, பேனரில் உள்ள வாசகத்தை படிக்கவும், புரிந்துகொள்ளவும் தெரியாதவர்களுக்கு எதற்கு பேனர் என சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
Also Read
-
”மாற்றுத்திறனாளிகளின் ஒளிமயமான வாழ்வுக்கு நாம் அனைவரும் பாடுபடுவோம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் : தமிழ்நாடு முழுவதும் 9,86,732 பேர் பயன்!
-
கனமழையில் இருந்தும் உள்ளூர் மக்களை மட்டுமல்ல; கடல் கடந்து சென்றவர்களையும் காத்த தமிழ்நாடு அரசு : முரசொலி!
-
டிட்வா புயல் : சென்னை கட்டுபாட்டு மையம், புரசைவாக்கத்தில் துணை முதலமைச்சர் ஆய்வு!
-
IT ஊழியர்கள் பணிச்சுமை குறித்த கேள்வி.. ஆய்வுகள் இல்லை என்று சொல்லும் ஒன்றிய அமைச்சர் - சு.வெ. விமர்சனம்!