Tamilnadu

பேனர் வைத்து தான் பிரதமர் மோடியை வரவேற்க வேண்டுமா? - தமிழக அரசுக்கு சுபஸ்ரீ-யின் தாய் கேள்வி!

சமீபத்தில் சென்னை பள்ளிக்கரணையில் அதிமுக பிரமுகரின் இல்லத் திருமண விழாவுக்காக வைக்கப்பட்ட பேனர் விழுந்து நடந்த விபத்தில் இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து சட்டவிரோதமாக பேனர் வைத்தது தொடர்பாக அதிமுக முன்னாள் கவுன்சிலர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கடுமையான கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், அடுத்த வாரம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்திற்கு வரவிருக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கையும், பிரதமர் மோடியையும் வரவேற்க பேனர் வைக்க வேண்டும் எனக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது தமிழக அரசு.

இது தொடர்பாக பேட்டி அளித்துள்ள சுபஸ்ரீயின் தாயார் கீதா, “சுபஸ்ரீ மறைந்த சம்பவம் இன்னும் மறக்கக்கூட முடியவில்லை. சில அரசியல் கட்சியினர் பேனர் வைக்கமாட்டோம் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்தும், சிலர் பேனர் வைக்கமாட்டோம் என உத்தரவாதமும் அளித்துள்ளனர்.”

“இப்படி அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து பேனர் விவகாரத்தில் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தும் போது, தமிழகத்தில் மீண்டும் பேனர் வைக்கிறோம் என கூறுவது மிகவும் வேதனையாக உள்ளது” என தமிழக அரசை சாடும் வகையில் கீதா தெரிவித்துள்ளார்.

“பேனரால் என்னுடைய மகள் சுபஸ்ரீ உயிரிழந்தது போன்று வேறு எவருக்கும் நடந்துவிடக் கூடாது என்பதற்காகவே இதனைக் கூறுகிறேன் என தெரிவித்த அவர், பிரதமரை வரவேற்க பேனர் மட்டும்தான் இருக்கிறதா? வேறு பல வழிகளிலும் வரவேற்கலாமே?” என கீதா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.