Tamilnadu

“தமிழ் தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் நீதிபதிகளா?” - TNPSC அறிவிப்புக்கு கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், கீழமை நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் ஏற்கனவே உள்ள நடைமுறையை மாற்றி தற்போது, தமிழ் எழுதப் படிக்கத் தெரியாதவர்களும் கீழமை நீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.

நீதிபதிகள் தேர்வு பெற்றபின்பு பயிற்சிக்காலத்தில் தமிழ் கற்றுக்கொண்டு தமிழ்மொழி தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்றும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு வழக்கறிஞர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த அறிவிப்பை உடனே திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் இயங்கும் பா.ஜ.க - மத்திய அரசின் அதிகாரத்தைக் கொண்டு அரசு கூட்டமைப்பு, அரசியல் அமைப்பு நிறுவனங்கள், வரலாற்று ஆய்வமைப்புகள், அறிவியல் ஆராய்ச்சித் துறை உள்ளிட்ட எல்லாத் துறைகளிலும் மதவாத சக்திகளை பணியில் அமர்த்தி வருகிறது.

இந்துத்துவக் கருத்தியலின் ‘இந்துராஷ்டிராவைக்’ கட்டமைக்கும் தீய நோக்கத்துடன் நீதித்துறையில் தலையீடு செய்வதை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழ் எழுத, படிக்கத் தெரியாதவர்கள், தமிழ்நாட்டின் கீழமை நீதிமன்றங்களில் நீதிபதிகளாக பணியாற்ற வழிவகுக்கும் நீதிபதிகள் பணித் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசுப் பணிவாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது.

கீழமை நீதிமன்றங்களில் தமிழ் தெரியாதவர்கள், அரைகுறை தமிழ் தெரிந்தவர்கள் நீதிபதிகளானால் எண்ணிப் பார்க்க முடியாத எதிர்விளைவுகள் ஏற்படும். நடைமுறையில் உள்ள நீதிபரிபாலன முறையினையும், கட்டமைப்பையும் சீர்குலைக்கும் பாஜக மத்திய அரசின் செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

இந்த அறிவிப்பின் மூலம் சட்டம் பயின்றுள்ள, பயின்று வரும் தமிழர்களின் வேலை வாய்ப்பு பறிக்கப்படுவதுடன், சாமானிய மக்கள் பாரம்பரிய வாழ்க்கை முறை, தமிழர் சமூக வாழ்வின் பழக்க, வழக்கம் உள்ளிட்ட பண்பாட்டு மரபுகளை உள்வாங்க முடியாதவர்கள் கீழமை நீதிமன்றங்களில் நீதிபதிளாகும் பேரபாயம் ஏற்பட்டிருக்காது.

இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் வெளியிட்டுள்ள அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.