Tamilnadu

காப்பகத்திலிருந்து சுவரேறிக் குதித்து தப்பிய டிக்டாக் வினிதா - வழக்குப்பதிவு செய்து போலிஸார் வலைவீச்சு!

சிவகங்கை தேவகோட்டையை அடுத்த கடம்பாக்குடியைச் சேர்ந்த வினிதா என்பவரின் கணவர் ஆரோக்கிய லியோ திருமணமாகி சில நாட்களிலேயே வேலை நிமித்தமாக வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டார்.

பொழுதுபோக்கிற்காக டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டுவந்த வினிதா, திருவாரூரைச் சேர்ந்த அபி என்ற பெண்ணுடன் நெருங்கிப் பழகி பின்னர் இருவரும் இணைந்து டிக்டாக் வீடியோக்களையும் பதிவிட்டுள்ளனர்.

அபியுடனான பழக்கத்தை கணவர் ஆரோக்கிய லியோ கண்டித்தும் அதனைக் கண்டுகொள்ளாமல் மீண்டும் அவருடன் பெண்ணுடன் பழகிவந்துள்ளார் வினிதா.

இதனையடுத்து, டிக்டாக்கில் வந்த வீடியோக்களை கண்டு அதிர்ச்சியுற்ற ஆரோக்கிய லியோ ஊர் திரும்பியதும் வினிதாவை அவரது பெற்றோர் வீட்டில் விட்டுச் சென்றுள்ளார். அதன் பிறகு தாய் வீட்டில் இருந்த 40 சவரன் நகைகளை எடுத்துக்கொண்டு வினிதா காணாமல் போய்விட்டதாக புகார் அளிக்கப்பட்டது.

தன்னை போலிஸார் தேடுவதை அறிந்த வினிதா தேவகோட்டை காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார். பின்னர் விசாரணை நடைபெறும் வரை காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டார் வினிதா.

ஆனால் சிறிது நேரத்திலேயே காப்பகத்திலிருந்து சுவர் ஏறிக் குதித்து வினிதா தப்பிச் சென்றுவிட்டதாக காப்பக பொறுப்பாளர் போலிஸாரிடம் தகவல் அளித்துள்ளார்.

அதனையடுத்து, விவகாரம் சூடுபிடிக்க தொடங்கியதால் வினிதா மீது வழக்குப்பதிவு செய்து அவரையும் அவரது தோழிகளான அபி, சரண்யாவையும் போலிஸார் வலைவீசித் தேடிவருகின்றனர்.