Tamilnadu

“குமரி மற்றும் தென்மேற்கு வங்கக் கடலுக்குச் செல்லாதீர்” : மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!

வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான இடங்களில் அடுத்த 24 மணிநேரத்திற்கு லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், வெப்பச்சலனம் காரணமாக வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 26 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும்.

இதனைத் தொடர்ந்து, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் சூறைக்காற்று வீசி வருவதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில், அதிகபட்சமாக கொடைக்கானலில் 6 செ.மீ, சிவகங்கை - இளையான்குடி, திருவாரூர் - திருத்துறைப்பூண்டி, கோவை - சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் 5 செ.மீ மழை பதிவாகி உள்ளது.