Tamilnadu

கீழடியை போன்று இலந்தைக்கரையிலும் ஆய்வு செய்ய வேண்டும் : வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வு குறித்து தமிழக தொல்லியல்துறை ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் வைகை நதிக்கரை நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது என்று குறிப்பிடபட்டுள்ளது. கீழடியில் கிடைத்த பொருட்களை, அமெரிக்காவில் உள்ள பீட்டா பகுப்பாய்வு சோதனை ஆய்வகதில் செய்யபட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

இதை தமிழ்நாட்டை கடந்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், கீழடியைப் போன்று சிவகங்கையின் பல்வேறு இடங்களில் பழைமையான பொருள்கள் கிடைத்துவருவதால் அந்தப் பகுதிகளிலும் அகழாய்வு செய்ய வேண்டும் எனத் வரலாற்று ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

கீழடியை சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டால் தான் கீழடியின் அடையாளங்களை முழுமையாக புரிந்துகொள்ள முடியும் என வரலாற்று ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இலந்தைக்கரையில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள்

இதுகுறித்து பேசிய வரலாற்று ஆய்வாளர் ஜெமினி ரமேஷ், ''கீழடியைப் போன்று பல்வேறு இடங்களில் பழைமையான பொருள்கள் கிடைத்துவருவது உண்மை. கீழடிக்கு அருகில் உள்ள இலந்தக்கரை, கண்டனிக்கரை, நாகமுகுந்தன்குடி, முடிக்கரை, கொல்லங்குடி, மல்லல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தொல்லியல் பொருள்கள் கிடைத்துவருகின்றன.

குறிப்பாக இலந்தக்கரையில் பொருந்தல், கொடுமணல், அரிக்கமேடு உள்ளிட்ட இடங்களில் கிடைத்ததுபோல் பெரும்பாலான பொருள்கள் கிடைத்துள்ளன. இலந்தக்கரை கீழடியைப் பல்வேறு கோணத்தில் ஒத்துப்போகிறது. எனவே, அந்தப் பகுதிகளில் அரசு விரைவில் அகழாய்வு செய்யவேண்டும்" என வலியுறுத்தினார்.

தமிழக அரசு வரலாற்று ஆய்வாளர்களின் கோரிக்கையை ஏற்று அந்த பகுதிகளில் விரைவில் அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.