Tamilnadu

கத்தி முனையை உடலிலேயே வைத்து தையல் போட்ட அரசு மருத்துவர்கள் : கடலூரில் பரபரப்பு!

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் கொங்கராயனூர் கிராமத்தைச் சேர்ந்த பாரதி என்ற நபரை அதே பகுதியைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவர் முன்விரோதம் காரணமாக கத்தியால் குத்தியுள்ளார்.

இதனையடுத்து, ரத்தம் சொட்ட சொட்டக் கிடந்த பாரதி கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது வடியும் ரத்தத்தை கட்டுப்படுத்துவதற்காக மருத்துவர்கள் அவசர சிகிச்சையாக தையல் போட்டுள்ளனர்.

அதன்பிறகு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில், பாரதியின் உடலில் குத்தப்பட்ட கத்தியின் முனையை உள்ளே வைத்து சிகிச்சை அளித்தது தெரிய வந்துள்ளது. இதையறிது பின்னர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அரசு மருத்துவர்கள் அனுப்பி வைத்துள்ளனர். ஜிப்மரில் அனுமதிக்கப்பட்ட பாரதியின் உடலில் இருந்த கத்தி முனை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக அரசு மருத்துவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பின்னர் இதுகுறித்து அறிந்த சமூக ஆர்வலர்கள் அரசு மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து, கடலூர் மக்கள் நலப் பணிகள் இணை இயக்குநர் பேசியபோது, “இளைஞரின் முதுகில் கத்தி இருந்ததை அறிந்தே அவசர சிகிச்சையாக தையல் மட்டும் போட்டுவிட்டு ஜிப்மருக்கு அனுப்பி வைத்தோம். அரசு மருத்துவமனையில் போதிய வசதி இல்லாததாலேயே ரத்தம் வெளியேறுவதை தடுப்பதற்காக தையல் போடப்பட்டது. மேலும், இது கவனக்குறைவால் ஏற்பட்ட சம்பவம் இல்லை என்றும், பாதிக்கப்பட்டவரிடம் தெரிவிக்கப்பட்ட பின்பே இவை மேற்கொள்ளப்பட்டது” என்றும் தெரிவித்துள்ளார்.