Tamilnadu
நளினியின் பரோலை நீட்டிக்கமுடியாது : அரசுத் தரப்பு வாதத்தால் சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வந்த நளினி, தனது மகளின் திருமண ஏற்பாடுகளை செய்வதற்காக பரோல் வழங்க கோரி வழக்கு தொடர்ந்து இருந்தார்.
அந்த வழக்கில் நளினிக்கு, ஒரு மாதம் பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவின்படி ஜூலை 25 முதல் பரோலில் வந்த அவருக்கு, மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், அக்டோபர் 15ம் தேதி வரை பரோல் நீட்டிப்பு வழங்கக் கோரி நளினி தரப்பில் மீண்டும் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கி மகளின் திருமண ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும், இலங்கையில் உள்ள தனது மாமியார் விசா பிரச்னை காரணமாக இந்தியா வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் விரைவில் சென்னை வந்துவிடுவார் என்பதாலும் பரோலை அக்டோபர் 15-ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக அனுப்பிய கோரிக்கை மனுவை அரசு நிராகரித்து விட்டதாகவும் நளினி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ், டீக்காராமன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுவுக்கு பதிலளிக்க இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கவேண்டும் எனவும், ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணங்களை கூறி பரோல் நீட்டிப்பு வழங்க கோருகின்றனர் எனக் கூறி பரோல் நீட்டிப்பு வழங்க அரசுத்தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
முதலில் மனுதாரர் நேரில் ஆஜரானார், அவருக்கு பரோல் வழங்கப்பட்டது. இரண்டு வாரங்கள் பரோல் நீட்டிப்பு கோரிய போது மூன்று வாரங்கள் பரோல் வழங்கப்பட்டது. தற்போதும் நீட்டிப்பு வழங்க கோருகிறார். சட்ட விதிகளுக்கு உட்பட்டுத் தான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியும் என பரோல் நீட்டிப்பு வழங்க நீதிபதிகள் மறுத்தனர்.
இதையடுத்து மனுவை திரும்பப் பெறுவதாக நளினி தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்று, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Also Read
-
551 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பாட்டா... 5,000 மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதலமைச்சர் அசத்தல்!
-
எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க அதிரடி நடவடிக்கை - சிறப்பு முயற்சிகள் எடுத்த திராவிட மாடல் அரசு!
-
“நெல் சாகுபடியில் சாதனை... நெல் கொள்முதல் இலக்கினை உயர்த்த வேண்டும்” : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
5 ஆண்டுகளில் TNPSC, தேசிய நலவாழ்வு குழுமம் மூலம் 48,418 பேருக்கு பணி ஆணை:அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
அரசுக் கல்லூரிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 5 உதவிப் பேராசிரியர்கள் : பணி ஆணைகளை வழங்கிய முதலமைச்சர்!