Tamilnadu

விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் மதக் கலவர முயற்சி - எதிர்த்து பெரியார் சிலை ஊர்வலம் நடத்திய பெ.தி.க-வினர்

விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மீர்சாகிப்பேட்டை மார்க்கெட்டில் நேற்று 200-க்கும் மேற்பட்ட பெரியார் திராவிடர் கழகத்தைச் சார்ந்தவர்கள் பெரியாரை போற்றும்விதமாக அவரது படங்கள், கொள்கைகளை பொறிக்கப்பட்ட பதாகைகள் ஏந்தி கோஷமிட்டபடி ஊர்வலமாக புறப்பட்டனர்.

மேலும், ஒரு வாகனத்தில் பெரிய அளவிலான அலங்கரிக்கப்பட்ட பெரியார் சிலையையும், கைகளில் சிறிய சிலைகளையும் கையில் ஏந்தியபடி தொண்டர்கள் உற்சாகத்துடன் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

ஊர்வலத்தினை தொடக்கி வைத்த பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை கு. ராமகிருட்டிணன் பேசும்போது, "தமிழ்நாட்டிற்கு சம்பந்தமில்லாத பிள்ளையார் ஊர்வலம் என்ற பெயரில் இந்துத்துவ இயக்கங்கள் மதக் கலவரத்தை தூண்ட எண்ணுகின்றன.

குறிப்பாக, பிற மதத்தினர் வாழ்கின்ற பகுதியில் கட்டாயமாக விநாயகர் சிலைகளை கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே இவர்களிடம் உண்டு. இவர்கள் காவல் துறையின் கட்டுப்பாடுகளை மீறி, கலவரம் உண்டாக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படுவதை கண்டிக்கின்றோம்.

தமிழ்நாட்டில் காவி கூட்டமானது வணிகர்கள், மக்களை அச்சுறுத்தி பணம் வசூல் செய்வது அதிகரித்துவருகிறது. அரசு இதை கவனத்தில்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் விநாயகர் ஊர்வலத்தை தடைசெய்ய வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவேண்டும்" என்று கூறினார்.

தொடர்ந்து விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு எதிராக பெரியார் சிலைகளை ஏந்தி ஊர்வலத்தை நடத்திய பெரியார் திராவிடர் கழகத்தினரை காவல் துறையினர் கைது செய்தனர்.