Tamilnadu

“காலத்தால் செய்த உதவி” : ஆபத்தான நேரத்தில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு சிகிச்சையளிக்க உதவிய தி.மு.க-வினர்!

அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்த நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சையளிக்க தேவையான நடவடிக்கைகளைச் செய்து உதவியுள்ளார் சட்ட மையம் நடத்தி வரும் தி.மு.க வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா.

தி.மு.க-வைச் சேர்ந்த தமிழன் பிரசன்னா நடத்திவரும் சட்ட உதவி மையத்திற்கு நேற்று இரவு 11 மணியளவில் அருப்புக்கோட்டை உலக்குடியிலிருந்து முனிஸ்வரன் என்பவர் தொடர்புகொண்டு, தனது மனைவி 9 மாதம் கர்ப்பம் எனவும், பிரசவ வலி ஏற்பட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார் என்றும், தன் குழந்தை வயிற்றில் உள்ள நீரை குடித்து விட்டதாகவும், மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை எனவும், பிற்பகல் 3 மணி முதல் சிகிச்சைக்காகக் காத்திருப்பதாகவும் அழுதபடி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தமிழன் பிரசன்னா, உடனடியாக மாவட்ட மருத்துவ அதிகாரியை தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். அவரைத் தொடர்புகொள்ள முடியாததால், மருத்துவத் துறை செயலாளரை தொடர்புகொள்ள, அவர் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிறகு, முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை இரவு 11.30 மணியளவில் தொடர்புகொண்டு இதுகுறித்துத் தெரிவித்துள்ளார். தங்கம் தென்னரசு, மாவட்ட மருத்துவ மற்றும் உயரதிகாரிகளிடம் பேசி இரவு 12.30 மணியளவில் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு, அப்பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 4 மணிக்கு அப்பெண்ணுக்கு ஆண்குழந்தை பிறந்ததுள்ளதாகவும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு தன் மனைவியும் குழந்தையும் நலமாக இருப்பதாகவும் தமிழன் பிரசன்னாவின் சட்ட மையத்துக்கு தொடர்புகொண்டு தெரிவித்துள்ளார் முனிஸ்வரன். இந்தத் தகவலை தமிழன் பிரசன்னா சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

காலமறிந்து, கர்ப்பிணிப் பெண்ணின் சிகிச்சைக்கு உதவிய முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழன் பிரசன்னா மற்றும் மருத்துவக் குழுவினருக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். ஆட்சியில் இல்லாத காலத்திலும் மக்களுக்கான இயக்கமாக இயங்கிவரும் தி.மு.க கழகத்திற்கு வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.