Tamilnadu

கீழடி அகழாய்வில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய உறைகிணறு: வியந்த மலேசிய தமிழர்கள்!

மதுரை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில், நான்காம் கட்ட அகழாய்வுப் பணிகள் முடிந்து, ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பத்து அடியில் குழிகள் பறித்து தொல்லியல் துறை ஆய்வுகளை நடத்தி வருகிறது.

இந்த அகழாய்வில் பண்டைய தமிழர்களின் கல்வியறிவை பறைசாற்றும் விதமான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எலும்பால் செய்யப்பட்ட எழுத்தாணி ஐந்தாம் கட்ட அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுபெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கடந்த 7ம் தேதி முருகேசன் என்பவரது நிலத்தில் உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டது. ஏழு அடுக்குகள் கொண்ட அந்த உறைகிணற்றின் காலத்தை கண்டறியும் முயற்சியில் தொல்லியல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். தற்போது இதற்கு அருகிலேயே மேலும் இரு உறைகிணறுகள் கண்டறியப்பட்டுள்ளன. உறைகிணற்றின் வெளிப்புறம் கோடுகள் வரையப்பட்டுள்ளன.

இதனிடையே அகழாய்வு முகாமை காண, மலேசியாவிலிருந்து உலகத்தமிழர் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்தவர்கள் நேற்று வந்தனர். இதேபோல் உறைகிணறு மற்றும் ஓட்டுச்சில்லுகளை மதுரை அருகே உள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவ, மாணவியர் ஆர்வமுடன் கண்டுவியந்தனர்.

இதன்மூலம் கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, தமிழர்கள் கட்டிடக் கலையில் சிறந்து விளங்கினார்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த பகுதியில் புகைப்படம் எடுத்து, இதனை பெருமையுடன் உணர்வதாக சமூக வலைத்தளங்களில் பகிந்து வருகின்றனர்.