Tamilnadu

“காப்பாத்து ஹரி” : பாத்ரூம் சுவரில் ரத்தத்தில் எழுதி இருந்த வாசகம்.. மாயமான மனைவி.. கொலை செய்யப்பட்டாரா ?

சேலம் மாவட்டம் சின்ன திருப்பதி பகுதியில் உள்ள சந்திரா கார்டன் குடியிருப்பில் வசித்து வருபவர் ஹரிஹரன். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இந்நிலையில், வழக்கம் போல வேலை முடிந்து வீடு திரும்பிய ஹரிஹரன் வீட்டில் தனது மனைவியைத் தேடியுள்ளார். ஆனால் அவர் வீட்டில் இல்லை. இதையடுத்து வீடு முழுவதும் அவர் தேடிய போது தான் அவருக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

வீட்டின் குளியலறையில் "விமல் ஆளுங்க... காப்பாத்து ஹரி" என்று ரத்தத்தால் எழுதப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து ஹரிஹரன் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஹரிஹரனிடம் விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியோடு தடயங்களும் பதிவு செய்யப்பட்டன. விமல் என்பவர் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தினர்.

மேலும் குளியலறையில் ரத்தத்தினால் எழுதப்பட்ட வாசகங்கள் மற்றும் ரத்தக்கறை படிந்த ஹாக்கி மட்டை ஆகியவை வீட்டில் கிடந்ததன் அடிப்படையில், தமிழ்ச்செல்வி கொலை செய்யப்பட்டு இருக்கலாமோ என்கிற சந்தேகத்தின் பேரில் போலிஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஜவுளி தொழில் செய்துவரும் ஹரிஹரனிடம் பணியாற்றி வருபவர் விமல். இந்த நிலையில் விமல் பெயரை குறிப்பிட்டு குளியலறையில் எழுதி இருப்பது பல்வேறு சந்தேகங்களைக் காவல் துறையினருக்கு ஏற்படுத்தி உள்ளது. அதனடிப்படையில் தமிழ்ச்செல்வியின் கணவர் ஹரிஹரன் மற்றும் விமல் ஆகியோரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

க்ரைம் சினிமா பாணியில் நடந்திருக்கும் இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.