Tamilnadu

திருடிய பொருட்களை எழுதிவைத்து, நாமம் போட்டுச் சென்ற கொள்ளையர்கள் : அப்பள கம்பெனியில் அட்டூழியம்!

மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்தவர்கள் பாலசுப்ரமணியன் மற்றும் விஜய். இருவரும் சேர்ந்து மதுரை கோமதிபுரம் பகுதியில் அப்பள கம்பெனி ஒன்றை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக அப்பளக் கம்பெனியில் பணம் திருடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர்கள் புகார் அளிக்காமல் இருந்துள்ளனர். இந்நிலையில், கடந்த வெள்ளியன்று அதே அப்பளக் கம்பெனிக்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த கணினி தராசு மற்றும் ஒரு லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

எந்தெந்தப் பொருட்களை கொள்ளையடித்தோம் என்ற தகவலையும் சில ஆங்கில வார்தைகளையும் அங்குள்ள சுவர் மற்றும் கதவுகளில் எழுதிவிட்டுச் சென்றுள்ளனர். மேலும், அப்பளக் கம்பனியின் சுவர்களில் நாமத்தை வரைந்து வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.

கொள்ளையர்கள் கொள்ளையடித்த பொருட்களை மூட்டையாகக் கட்டி இருசக்கர வாகனங்களில் எடுத்துச் சென்ற காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த அண்ணாநகர் காவல் நிலைய போலீசார் கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.

காவல்துறைக்கு சவால் விடுக்கும் வகையில், கொள்ளையர்கள் அடையாளங்களை வரைந்துவிட்டு கொள்ளையடித்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.