Tamilnadu

கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட சுடுமண் பாத்திரம்... 2000 ஆண்டுகள் பழமையானது எனத் தகவல்!

கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய உணவுக் குவளை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் 47 லட்ச ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது. ஜூன் 13ம் தேதி முதல் தொடங்கிய அகழாய்வில் இதுவரை பழங்காலக் கோட்டைச் சுவர், உறைகிணறு, பானை, பானை ஓடுகள், மூடிகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டுள்ளன.

இந்நிலையில், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மண்ணால் உருவாக்கப்பட்ட குவளை போன்ற பாத்திரம் கிடைத்துள்ளது. உணவுக் குவளையின் பெரும்பகுதி சேதமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உட்புறமாகக் குவிந்து காணப்படும் வாய் அகன்ற இந்த மண் பாத்திரம் சுடுமண் கிண்ணம் எனக் கூறப்படுகிறது. பாத்திரத்திற்கு உட்புறம் கருப்பு நிறத்திலும் வெளிப்புறம் சிவப்பு வண்ணத்திலும் உள்ளது. தொடர்ந்து பழங்காலத்திய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருவது தொல்லியல் துறையினரை உற்சாகப்படுத்தியுள்ளது.

கீழடியில் நடைபெற்று வரும் ஆய்வுப் பணிகளை மதுரை எம்.பி-யும், கீழடி வரலாற்று ஆய்வாளருமான சு.வெங்கடேசன் அவ்வப்போது பார்வையிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.