Tamilnadu

பெண்களைச் சீண்டும் நபர்களைத் தூக்க வருகிறது ‘பிங்க்’ போலிஸ் வாகனம் : அரசு அதிரடி !

நாடு முழுவதும் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால், பெண் பிள்ளைகளை வீட்டை விட்டு வெளியே அனுப்பவே பெற்றோர்கள் அச்சமுற்று வருகின்றனர்.

குறிப்பாக தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆகவே, காவல்துறை ஏ.டி.ஜி.பி ரவி தலைமையில் தனி அதிகாரிகள் கொண்ட குற்றப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு, அனைத்து மகளிர் காவல்நிலையத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், வன்கொடுமை சம்பவங்களை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகள் இணைந்து பெண்களுக்காகவும், குழந்தைகளுக்காகவும் சிறப்பு ரோந்து வாகனத்தை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மகளிர் காவல்நிலையங்களுக்கென பிரத்யேகமாக பிங்க் நிறத்தில் ரோந்து வாகனங்கள் செயல்படவிருக்கின்றன. இவை, பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான குற்றச்செயல்களை தடுப்பதற்காக மட்டுமே இயங்கும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக சென்னைக்கு மட்டும் 35 ரோந்து வாகனங்கள் வழங்கப்பட உள்ளது. விரைவில் முதலமைச்சர் பழனிசாமி தொடங்கிவைத்த பின்னர் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த பிங்க் ரோந்து வாகனத்தைச் சுற்றி குழந்தைகளுக்கான 1098 மற்றும் பெண்களுக்கான 1091 ஆகிய அவசர எண்களும் எழுதப்பட்டுள்ளது. ஏற்கெனவே கேரளாவில் இதுபோன்ற பிங்க் வாகனம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.