Tamilnadu

பா.ஜ.க - அ.தி.மு.க சந்தர்ப்பவாத, மதவாத கூட்டணிக்கு தமிழகத்தில் எப்போதும் இடமில்லை - முத்தரசன்

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் மொத்தம் 4,84,980 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அ.தி.மு.க கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 4,76,690 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

ஏ.சி.சண்முகத்தை விட 8,290 வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் வெற்றியை கைப்பற்றியுள்ளார். இந்த வெற்றிக்கு தி.மு.க கூட்டணி கட்சி தலைவர்கள் வேலூர் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலச் செயலாளர் முத்தரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, “வேலூர் தொகுதியில் கடந்த 5-ம் தேதி நடைபெற்ற தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பேராதரவுடன் களம் கண்ட, தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெறச் செய்திட்ட, வேலூர் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர் பெருமக்களும் வேலூரில் முகாமிட்டு தங்களின் சக்தி முழுவதையும் பயன்படுத்தினர். ஆனால் வேலூர் தொகுதி மக்கள் தெளிவான முறையில் தீர்ப்பளித்துள்ளனர். பா.ஜ.க - அ.தி.மு.க தலைமையிலான சந்தர்ப்பவாத கூட்டணிக்கு எதிராக வேலூர் தொகுதி மக்களின் தீர்ப்பு மூலம், சந்தர்ப்பவாதிகளுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை என்பதனை உறுதிப்படுத்தி உள்ளனர்.

தெளிவான முறையில் தீர்ப்பளித்த வேலூர் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கும் பணியாற்றிய செயல் வீரர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்”. என அவர் தெரிவித்துள்ளார்.