Tamilnadu

“பா.ஜ.க அரசால் எதையும் கட்டமைக்க முடியாது; சீரழிக்கத்தான் முடியும்” : ராகுல் தாக்கு!

மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள் பெரும்பாலும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. தனியார் நிறுவனங்களுக்கு மட்டுமே அரசு ஆதரவாகச் செயல்படுவதால், பி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல் ஆகியவை கடும் நிதி நெருக்கடியால் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இதனால், ஊழியர்களுக்கு ஜூலை மாதம் வழங்கவேண்டிய மாத ஊதியம், இன்னும் வழங்கப்படாத அவலம் ஏற்பட்டுள்ளது.

இந்திய பொருளாதார சரிவு குறித்து எல் & டி நிறுவன தலைவர் ஏ.எம்.நாயக் கூறிய கருத்து, இந்திய ரயில்வேயில் 3 லட்சம் ஊழியர்களை குறைக்கத் திட்டமிட்டுள்ளது, ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள சரிவு, பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் தவித்து வருவது ஆகியவை குறித்து பல்வேறு ஊடகங்களில் வெளியான செய்திகளின் தலைப்புகளையும் இணைத்து பதிவிட்டுள்ளார் ராகுல்.

பா.ஜ., அரசு குறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள ராகுல், “பா.ஜ.க அரசால் எதையும் கட்டமைக்க முடியாது. மாறாக, கடின உழைப்பால் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவற்றை இடிக்க மட்டுமே முடியும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, இந்தியாவின் பொருளாதார சரிவு குறித்து ட்வீட் செய்த அவர், “திறமையற்ற நிதியமைச்சர், சுரங்கப்பாதையின் முடிவில் வெளிச்சம் இருக்கிறது என்று சொல்கிறார். வெளிச்சம் இல்லாத சுரங்கப்பாதையில் இந்திய பொருளாதாரம் கவிழ்ந்துள்ளது” என ராகுல் காந்தி ட்வீட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.