Tamilnadu

கை வைத்தாலே இடிந்து விழும் மதகு : 1 கோடி செலவு கணக்கு காட்டி ஏமாற்றிய மதுரை அதிகாரிகள் - விவசாயிகள் கவலை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகில் உள்ள தேனூர் கிராம கண்மாய் உள்ளது. இந்த கண்மாயை ஆதாரமாக கொண்டுதான் 1000 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெறுகிறது. கண்மாய் மோசனமான சூழலில் உள்ளதால் அதனை சீரமைக்க அப்பகுதி கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை எழுப்பி வந்தனர்.

இதனையடுத்து, பொதுப்பணித்துறை சார்பில் இந்த கண்மாயில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதற்காக 1 கோடியே 20 லட்ச ரூபாய்க்கு டெண்டர் கோரப்பட்டு, அதன் அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் முழுமையாக நிறைவடையாத சூழலில் பணிகள் முடிந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அந்த கண்மாய் முறையாக தூர் வாரப்படாமலும், சீமைக்கருவேல முட்கள் அகற்றப்படாமலும் இருந்துள்ளது. இந்த ஏரியைப் பார்வையிட்ட விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் முறையாக தூர்வாரப்படவில்லை என விவசாயிகள் மாவட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

புதிதாக கட்டிய மதகு

மேலும் இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், “இந்த காண்மாயை தூர்வாருவதற்கும், சீமைக்கருவேல மரங்கள் அகற்றுவதற்கும் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் அளவிற்கு பொதுப்பணித்துறை டெண்டர் கோரியது.

ஆனால் அந்த டெண்டர் எடுத்தவர்கள் பணிகளை சரியாக மேற்கொள்ளவில்லை. மேலும் இந்த ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்திருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. இதுமட்டுமின்றி உபரி நீர் வெளியேறும் கால்வாய் செப்பனிடப்படவில்லை. கால்வாயில் பல பகுதியில் விரிசல்கள் அப்படியே உள்ளது என்று குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தொடர்ந்து பேசிய அவர், இங்கு புதிதாக மதகு ஒன்றைக் கட்டியுள்ளனர். அது தொட்டாலே பெயர்ந்துவிழும் அளவிற்கு உள்ளது. இப்படி மோசமான மதகுகளை வைத்து தண்ணீரை எப்படி சேமிக்க முடியும்? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் அடுத்துவரும் வடகிழக்கு பருவமழைத் தொடங்குவதற்கு முன்பு இந்த கோளாறு பணிகளை சரி செய்து முடிக்கவேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தவேண்டும்” என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.