Tamilnadu

நிலத்தடி நீர் திருட்டு : போலிஸாரும் இதற்கு உடந்தையா ? உடனடியாக நடவடிக்கை எடுக்கச் சொன்ன உயர் நீதிமன்றம் 

தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள சூழலில் நிலத்தடி நீர் தொடர்ந்து திருடப்பட்டு வருவதாக வரும் புகார்களின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை நங்கநல்லூர், பழவந்தாங்கல் பகுதியில் நிலத்தடி நீரை மின்மோட்டார் மூலம் உறிஞ்சி வர்த்தகத்திற்காக பயன்படுத்துவதாக தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக ஆய்வு நடத்த உத்தரவிட்டு மூத்த வழக்கறிஞர் சந்திரகுமாரை ஆணையராக நியமித்தது உயர் நீதிமன்றம்.

அதன் பேரில் ஆய்வு நடத்திய விசாரணை ஆணையர், நாள்தோறும் 250 - 300 லாரிகளில் சட்டவிரோதமாக நீர் எடுத்துச் செல்லப்படுவதாகவும், நிலத்தடி நீரை உறிஞ்சுவதற்கு விவசாயத்துக்காக இலவசமாக கொடுக்கப்பட்ட மின்சாரத்தை பயன்படுத்துவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுப்பதற்கு பழவந்தாங்கல் காவல்துறை ஆய்வாளர் நடராஜ் உடந்தையாக இருப்பதாகவும், ஆய்வு மேற்கொள்ளும் போது தன்னை மிரட்டியதாகவும் விசாரணை ஆணையர் சந்திரகுமார் அறிக்கையில் சுட்டிக்காட்டினார்.

இதனைடுத்து, நிலத்தடி நீர் சட்டவிரோதமாக எடுக்கப்படவில்லை என அறிக்கை தாக்கல் செய்ததற்கு, விசாரணை ஆணையரை மிரட்டியதற்கு எதிராகவும் பழவந்தாங்கல் ஆய்வாளளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தும், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் உத்தரவிட்டனர்.

மேலும், சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கப்படுவது தெரிந்தும் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என தாசில்தாருக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நிலத்தடி நீரை திருடுபவர்கள் மீது 378, 379 தண்டனை பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யவும் காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.

அதேபோல், திருவள்ளூர் மாவத்தில் நிலத்தடி நீர் எடுத்தவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்யாததற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், அதிகாரம் இருந்தும் நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், வணிகவரித்துறை அதிகாரி ஆகிய மூவருக்கு எதிராக சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த உத்தரவிடப்படும் என எச்சரித்தனர்.

இறுதியாக, நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜூலை 22ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.