Tamilnadu

மக்கள் நலனுக்காக போராடியது ஒரு குற்றமா? - முகிலன் மனைவி பூங்கொடி கண்ணீர் மல்க பேட்டி!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக அரசுக்கும், ஸ்டெர்லைட் ஆலைக்கும் எதிராக ஆதாரங்களை வைத்துள்ளதாகத் தெரிவித்த சமூக செயற்பாட்டாளர் முகிலனை கடத்தி பல்வேறு வகையில் சித்ரவதை செய்துள்ளதாக அவரது மனைவி பூங்கொடி குற்றஞ்சாட்டியுள்ளார்.

முன்னதாக, குளித்தலையைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரில் முகிலன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை நேற்று நள்ளிரவு கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ஜூலை 24ம் தேதிவரை முகிலனை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.

விசாரணைக்கு அழைத்து வருவதற்கு முன்பு நீதிமன்றம் முன்பு பத்திரிகையாளர்கள் முகிலனை நெருங்கவிடாமல் காவல்துறையினர் 100 மீட்டர் இடைவேளியில் தடுப்புகளை அமைத்திருந்தனர். இதனால், போலீசாருக்கும், செய்தியாளர்களுக்கும் இடையே வாக்குவாதமும் ஏற்பட்டது.

இதனையடுத்து கரூரில் பேட்டியளித்த பூங்கொடி, துப்பாக்கிச்சூடு தொடர்பாகவும், வேதாந்தா நிறுவனத்துக்கு எதிராகவும் முகிலனிடம் உள்ள ஆதாரத்தை பெறுவதற்காகவே அவரை கடத்திச் சென்று இதுநாள் வரை நாய்களை விட்டு கடிக்க வைத்தும், அடித்தும் சித்ரவதை செய்துள்ளனர் என குற்றஞ்சாட்டினார்.

நாட்டில் கொலை, கொள்ளை போன்ற சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டவர்கள் எல்லாம் சுதந்திரமாக வெளியில் இருக்கிறார்கள். மக்களின் நலனுக்காக போராடிய ஒரு மனிதரை இரவு பகல் பாராமல் கொஞ்சம் கூட ஓய்வளிக்காமல் அலைக்கழித்து வருகிறார்கள் என வேதனையுடன் பேசியுள்ளார் பூங்கொடி.