Tamilnadu

வரி வருவாயில் தமிழகத்திற்கு 4% - தமிழ் இலக்கியம் பாடி தமிழகத்தையே ஏமாற்றிய நிதியமைச்சர்!

2019-20ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். அதில், மக்கள் நலன் சார்ந்த எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த நிதி நிலை அறிக்கையில் தமிழகத்தை மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு திட்டமிட்டே புறக்கணிப்பதாக கருத்து எழுந்துள்ளது.

மாநிலங்களில் இருந்து மத்திய அரசு ஜி.எஸ்.டி வரிகளை வசூலிக்கும். இந்த வரிகளில் குறிப்பிட்ட பகுதியை மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும். இந்த பணியை நிதி ஆணையம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே நிதி ஆணையம், தமிழகம் போன்ற வளர்ந்த மாநிலங்களுக்கான நிதி பகிர்வை குறைத்துக் கொண்டே வருகிறது. பின் தங்கிய மாநிலங்களுக்கு அதிகமாக ஒதுக்கி வருகிறது. இந்த ஆண்டு தமிழகத்துக்கு வெறும் 4% மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது.

அதிக பட்சமாக உத்தரபிரதேச மாநிலத்துக்கு ஒரு லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதனையடுத்து, பீகார் மாநிலத்துக்கு 78 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 4% நிதியால் வெறும் 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மட்டுமே கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.

பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களில் இருந்து குறைந்த வரிகளை பெற்றுக்கொண்டு, அவர்களிடம் அதிக நிதி பகிர்ந்து கொடுக்கப்படுகிறது. பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களை பழிவாங்கும் நடவடிக்கை என பொருளாதார வல்லுனர்கள் பலர் கருத்துத் தெரிவித்துள்ளானர்.

நேற்றைய பட்ஜெட்டில் ’யானை புகுந்த நிலம் போல்’ என்ற புறநானூற்று பாடலை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையில் பேசியிருந்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அதாவது உணவு (வரி) தேடும் யானை (அரசு) நெல் வயலுக்குள் புகுந்தால் வயல் நாசமாகும். அதுபோல் இல்லாமல், சரியான அளவு வரியை பெற்று, ஆட்சி செய்பவனே சிறந்த அரசன் என்கிறது பிசிராந்தையாரின் அந்த பாடல். தமிழ் இலக்கியப் பாடலை மேற்கோள் காட்டி பேசிய நிதியமைச்சர், தமிழகத்துக்கு வழங்கும் வரி வருவாயில் பாரபட்சம் காட்டுவது வேடிக்கை. தமிழகம் என்ற நெல் வயலில் புகுந்த யானைகளாகத் தான் மோடி அரசை பார்க்கும் நிலையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்படுத்தியுள்ளார்.