Tamilnadu

காதல் மனைவியை தவிக்கவிட்டு, திருநங்கையை மணமுடித்த கணவர் : டிக் டாக் மூலம் கண்டுபிடிப்பு!

விழுப்புரத்தைச் சேர்ந்த ஜெயப்பிரதா என்பவரும், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரும் காதலித்து கடந்த 2013-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன.

குடும்ப பிரச்னை காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு வீட்டை விட்டுச் சென்ற சுரேஷை கண்டுபிடித்துத் தரக் கோரி விழுப்புரம் தாலுகா போலீசாரிடம் புகார் அளித்தார் ஜெயப்பிரதார்.

3 ஆண்டுகளாக காணாமல் போன சுரேஷ் தேடப்பட்டு வந்த நிலையில், டிக் டாக் சமூக வலைதளத்தில் திருநங்கையுடன் ஒரு நபர் ஆடி பாடி வீடியோ பதிவிட்டதை கண்ட ஜெயப்பிரதாவின் உறவினர் ஒருவர் அவரிடம் காண்பித்துள்ளனர். அதைக்கண்ட ஜெயப்பிரதா இது தனது கணவர்தான் என உறுதி செய்தார்.

பின்னர் இது தொடர்பாக தாலுகா போலீசாரிடம் தெரிவித்ததை அடுத்து, ஜெயப்பிரதாவின் கணவர் சுரேஷ் ஓசூரில் தங்கியிருப்பதகாவும், அந்த வீடியோவில் இருந்த திருநங்கையும் ஓசூரில் அவருடன் வாழ்ந்து வருவதாகவும் போலீசாருக்கு துப்பு கிடைத்திருக்கிறது.

இதனையடுத்து ஓசூருக்கு விரைந்த போலீசார் அங்கிருந்து சுரேஷை மீட்டு அவரது மனைவி ஜெயப்பிரதாவிடம் சேர்த்து வைத்தனர். முன்னதாக சுரேஷிடம் விசாரிக்கும் போது அவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்ததாகவும், அப்போது சில திருநங்கைகளுடன் ஏற்பட்ட பழக்கத்தில் ஒரு திருநங்கையுடன் குடும்பம் நடத்தியதாகவும் தெரிவித்தார். இந்த நிகழ்வு விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.