Tamilnadu

தமிழகத்தில் புதிதாக 20 ஹைட்ரோகார்பன் கிணறுகள்? திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி என தகவல்!

தமிழகம் மற்றும் புதுவையில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 244 இடங்களில் ஆய்வு மேற்கொண்டு ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. விழுப்புரம் முதல் புதுச்சேரி வரை 1,794 சதுர கிலோ மீட்டர் தூரம் கிணறுகள் தோண்டப்பட இருக்கின்றன.

மேலும் மக்களின் எதிர்ப்பை மீறி, நடவு முடிந்த சில நாட்களேயான வயல்களில் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு ஹைட்ரோ கார்பன் எடுக்கும் பணியை ஓ.என்.ஜி.சி செய்து வருகிறது. திருவாரூர்மாவட்டத்தில் 5 ஒன்றியங்களிலும், 16 ஊராட்சிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சி தீவிரம் காட்டி வருகிறது.

இதை எதிர்த்த தொடர்ந்து விசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். மேலும் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட பேரழிவுத் திட்டங்களை எதிர்த்து 596 கிலோ மீட்டருக்கு மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு அனைத்துக் கட்சியினர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக மேலும் 104 கிணறுகள் அமைக்க சுற்றுச்சூழல் துறை அனுமதிகோரி, ஓ.என்.ஜி.சி நிறுவனம் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இது டெல்டா விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது மேலும் தமிழகத்தில் நாகை மாவட்டம் நல்லநாயகிபுரம், சீர்காழி அருகே உள்ள நெம்மேலி, இவாநல்லூர், சோழசேகரநல்லூர், ஆனந்ததாண்டவபுரம், ‌ பந்தலூர், டி.மணல்மேடு, தில்லையாடி, சேஷமூலை ஆகிய இடங்கள், புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளாறு மற்றும் காரைக்கால் ஆகிய இடங்கள் என 11 இடங்களில் ஆய்வுக்கிணறு‌கள் அமைக்க உள்ளது ஓஎன்ஜிசி நிறுவனம்.

மேலும், திறந்தவெளி அனுமதி முறையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆயிரத்து 403.41 சதுர கிலோ மீட்டர் பரப்பில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. அம்மாவட்டத்தில் ஆர். எஸ்‌. மங்களம் அருகே உள்ள கருங்குடி, தேவிபட்டினம் அருகே பெருவயல், பெருங்கலூர், ராமநாதபுரம் அருகே பலன்குளம் உள்ளிட்ட 5 இடங்களில் ஆய்வுக்கிணறு‌கள் அமைக்கப்பட உள்ளன.

இது டெல்டா விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தமிழகத்தை பாலைவனமாக்கும் செயல் என விவசாய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.