Tamilnadu
“ஒருபுறம் தடை.. மறுபுறம் சமாதானம் பேசுவதாக நாடகம்?” : அமெரிக்கா மீது ஈரான் குற்றச்சாட்டு!
டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபரான பிறகு திடீரென ஈரானுடனான ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதாக அறிவித்தார். பின்னர் ஈரானுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக, அமெரிக்கா தனது போர்க்கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் தளவாடங்களை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பியது.
இதனையடுத்து ஈரான் தனது சிறிய ரக போர் விமானம், போர்க்கப்பல்களை அமெரிக்காவை நோக்கி திருப்பியதாக சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது. மேலும், ஈரானின் தெற்குப் பகுதியில் உள்ள ஹோர்மஸ்கான் என்ற பகுதிக்குள் அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் பறந்ததயை அடுத்து அந்த விமானத்தை ஈரான் காவல்படை சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்தது. இதனால் இருநாடுகளும் பகைமையை மேலும் அதிகரித்துக் கொண்டனர்.
இதனையடுத்து ஆத்திரம் அடைந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரானுக்கு எதிராக ராணுவ தாக்குதல் நடத்த முடிவு செய்ததாக அமெரிக்க நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ஈரானின் ஏவுகணைகள், கண்காணிப்பு ரேடார்கள் ஆகியவற்றை குறிவைத்து ராணுவ தாக்குதலை நடத்த திட்டமிட்டு இருந்ததாகவும், இந்த தாக்குதலுக்கு டொனால்டு ட்ரம்ப்பும் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
பின்னர் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தாக்குதலுக்கு தயாரான நிலையில், டொனால்டு ட்ரம்ப் திடீரென தாக்குதல் நடத்த வேண்டாம் என்று பின்வாங்கியதாக செய்திகள் வெளிவந்தன. இது ஈரானை அடிபணிய வைக்க அமெரிக்கா மேற்கொண்ட உத்தி எனவும் பலர் கருத்து தெரிவித்துவந்தனர்.
இந்நிலையில், ஈரான் மூத்த தலைவர் அயத்துல்லா அலி காமெனி மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. இது தொடர்பான சிறப்பாணையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன்று கையெழுத்திட்டார்.
இந்நிலையில், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் செய்தியாளர்களை சந்தித்தார். அந்தச் சந்திப்பின் போது அவர் கூறியதாவது, அமெரிக்கா ஈரானுடன் அனைத்து விவகாரங்கள் குறித்தும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக இருப்பதாகவும், சமாதான கதவுகளை திறந்தே வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதனையடுத்து, ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி கூறுகையில், "அமெரிக்கா ஒருபுறம் வரிசையாக தடைகளை விதிக்கிறது. மறுபுறம் சமாதானப் பேசுவதற்கு கதவுகளைத் திறந்து வைப்பதாக பொய் பேசுகிறது. பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கும் அதே வேளையில் எங்கள் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மீது தடை விதிப்பீர்களா? இதன் மூலம் நீங்கள் பொய் சொல்கிறீர்கள் என்பது தெளிவாகிவிட்டது.” என அவர் குற்றச்சாட்டியுள்ளார்.
Also Read
-
Delimitation விவகாரம் : அமித் ஷாவைப் பார்த்து பயமா? – முதலமைச்சர் விஜய்க்கு தயாநிதி மாறன் MP கேள்வி!
-
ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா? : அமைச்சர் செங்கோட்டையனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த எ.வ.வேலு!
-
அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை விவகாரம் : த.வெ.க அரசுக்கு கோ.வி.செழியன் கேள்வி சரமாரி கேள்வி!
-
“ திமுக ஆட்சியில் நிதியுதவி கிடைத்த மாணவனுக்கு தவெக ஆட்சியில் கிடைக்காதது ஏன்?” : இ.பரந்தாமன் கேள்வி!
-
சிவகாசி பட்டாசு ஆலை ஆய்வுகள் : பேரவையில் தங்கம் தென்னரசு - அமைச்சர் கீர்த்தனா இடையே காரசார விவாதம்!