Tamilnadu

நிலத்தடி நீர் உயர மழைநீர் சேமிப்பு திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் - மேதா பட்கர்!

சென்னை மட்டுமில்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் குடிநீர் பிரச்னையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஆளும் அ.தி.மு.க அரசு எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாதது தமிழக மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பின் ஆலோசகரும் சூழலியல் போராளியுமான மேதா பட்கர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், '' நீர் மேலாண்மையை பாதுகாக்க வேண்டிய முக்கிய கடமை நமக்கு இருக்கிறது. அரசுகளும் உரிய நடவடிக்கை எடுத்து நீர் மேலாண்மையை பாதுகாக்க வேண்டும். குடிசை வீடுகளையும், ஏழை எளிய மக்களின் வீடுகளையும் நீர்நிலையில் ஆக்கிரமிப்புகள் என்று கூறி அகற்றுகின்றனர். ஆனால் பெரிய பெரிய கட்டடங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற யாரும் முன்வரவில்லை.

அதுபோன்று பூமிக்கு அடியில் எடுக்கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்கள் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இயற்கை வளங்களை பாதுகாக்க காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட பசுமை தீர்ப்பாயங்கள், அமைப்புகள் ஆகியவற்றை செயல்பட விடாமல் தடுக்கப்படுகின்றன. மழைநீர் சேமிப்பு திட்டத்தை முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும். அப்போது தான் நிலத்தடி நீர் கிடைக்கும்.

தொழிலாளர்களுக்கு எதிரான 4 சட்ட வரைமுறைகளை மத்திய அரசு கொண்டு வர நினைக்கிறது. இந்த சட்ட வரைமுறைகள் கொண்டு வரப்படும் பட்சத்தில் தொழிலாளர்களின் நலன், உரிமைகள் பாதிக்கப்படும். எனவே அனைத்து மாநில அரசுகளும் அனைத்து தரப்பினரும் வரைமுறையை கொண்டு வரக்கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் " என்று குறிப்பிட்டுள்ளார்.