Tamilnadu

தண்ணீருக்கு பூட்டு: பஞ்சமில்லை என இவர்களிடம் சொல்ல அமைச்சர் வேலுமணிக்கு தைரியம் உண்டா?

தமிழகத்தில் தண்ணீர் பஞ்சமே இல்லை. தண்ணீர் இல்லை என வீணாக வதந்திகளை பரப்ப வேண்டாம் என்கிறார் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. அமைச்சருக்காகத் தான் இந்த செய்தி.

கீழ் வரும் படத்தை பாருங்கள் இது, இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியத்தின் சிக்கல் என்ற கிராமத்தில் உள்ள பாண்டியன் ஊரணி. வறண்டு கிடக்கும் இந்த ஊரணியில் மக்கள் சொந்த காசை செலவழித்து ஊற்று நீர் எடுக்க கிணறு தோண்டி உள்ளனர். அந்த நீரை வேறு யாரும் எடுத்து விடக்கூடாது என்பதற்காக வேலி அமைத்து பூட்டி வைத்துக் கொள்கின்றனர். (அந்த ஊற்றுநீர் அவர்களுக்கே போதுமானதாக இல்லை).

ஊரணியின் மையத்தில் ஆங்காங்கே திட்டுத்திட்டாக குடிசை போல தெரிபவை அப்படி பூட்டு போடப்பட்ட கிணறுகள்தான். இது குடிநீர் கூட இல்லை. குளிக்க, துணி துவைக்கவே பயன்படும் அதையே பூட்டு போட்டு பாதுகாக்க வேண்டியிருக்கிறது.

ஆனால், அமைச்சர் சொல்கிறார், தண்ணீர் பிரச்னை புரளியாம்.மலையடிவாரத்திலும்,வைகையாற்றிலும், உப்பாற்றிலும் ஊற்று தோண்டி, அது சொட்டு சொட்டாக ஊறுவதற்கு மணிக்கணக்கில் காத்திருந்து, ஒவ்வொரு டம்ளராக எடுத்து ஒரு குடம் நிரப்ப வேகாத வெயிலில் காத்துக்கிடக்கும்... அதிமுகவுக்கு ஓட்டு போட்ட அந்தப் பெண்ணிடம் சென்று அமைச்சர், தண்ணிப் பிரச்னை ஒரு புரளி என்று சொல்லிப் பார்க்கட்டும். எது உண்மை என்பதை அவர் அமைச்சருக்கு புரிய வைப்பார்.

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தின் வீரியம் எந்த அளவுக்கு இருக்கிறது என படம்பிடித்துக்காட்டும் அதிர்ச்சி ஆவணப்படம் கீழே பதிவிடப்பட்டுள்ளது. உண்மை நிலை நாம் நினைப்பதை விட கொடூரமாக இருக்கிறது.