Tamilnadu

குப்பைக் கிடங்காகும் பாலாறு : வேலூர் மாநகராட்சி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

பாலாறு குப்பைக் கிடங்காக மாறுவதை எதிர்த்த வழக்கில் வேலூர் மாநகராட்சி நாளை விளக்கம் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலூரைச் சேர்ந்த ரமேஷ் ஆனந்தராஜ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள விவரம் வருமாறு, வேலூர் மாவட்டத்தில் ஓடும் பாலாறு விவசாயத்திற்லு பிரதான நீர் ஆதாரமாக விளங்கி வந்தது. சில ஆண்டுகளாக பாலாற்றில் உள்ள நீர் வற்றிப்போனதால் ஆற்றில் அதிகளவில் மணல் கொள்ளை நடந்து வருகிறது.

தோல் தொழிற்சாலையிலிருந்து வரும் கழிவு நீர் அதிகளவில் ஆற்றில் விடப்படுகிறது. தற்போது வேலூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டதால் நகர்ப்புறத்தில் உள்ள குப்பைகள் பாலாற்றில் கொட்டப்படுகிறது என்றும், தற்போது 300 கோடி ரூபாய் செலவில் அரசு பாலாற்றுப் படுகையில் குப்பை கிடங்கு கட்டி வருவதாகவும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.

தற்போது பாலாறு ஓடுகின்ற இடமான விருதம்பட்டு என்கிற இடத்தில் பழைய இரும்பு பொருட்கள், பழைய வாகனங்கள் அரசின் பழைய கோப்புகள் போடுகின்ற குடோன் அமைக்கப்பட்டுள்ளது. இது காலப்போக்கில் இதுவும் குப்பைக் கிடங்காக மாறும் வாய்ப்பு இருப்பதாகவும் இதே நிலை நீடித்தால் பாலாறு ஒரு காலத்தில் கூவம் ஆறாக மாறும் சூழ்நிலை உருவாகக் கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாலாற்றைப் பாதுகாக்கவும் அதில் அமைக்கப்பட்ட பழைய பொருட்களுக்கான குடோனை உடனே அகற்றக் கோரியும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி மணிக்குமார் மற்றும் நீதிபதி சுப்பிரமணிய பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக நாளை வேலூர் மாநகராட்சி பதிலளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.