உச்ச நீதிமன்றம்
Tamilnadu

எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு !

சென்னை - சேலம் இடையே 8 வழிச்சாலை அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்துக்கு எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நிலம் கையகப்படுத்த தடை விதித்தது. மேலும், திட்டத்தை மீண்டும் புதிதாக வடிவமைக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில், சேலம்-சென்னை 8 வழிச்சாலைத் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்துப் மத்திய அரசின் சார்பாக 8 வழிச்சாலை திட்டத்தின் திட்ட அமலாக்க பிரிவு இயக்குனர் மேல்முறையீடு செய்த வழக்கு நீதிபதி இந்து மல்கோத்ரா தலைமையிலான அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது, சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடையை நீக்க வேண்டும் என்று மத்திய அரசு கோரிக்கை விடுத்தது.

8 வழிச்சாலை தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம். 8 வழிச் சாலை திட்டத்திற்கு நிலத்தை வாங்கிய விவகாரத்தில் நிறைய தவறுகள் நிகழ்ந்து இருப்பதை பார்க்க முடிகிறது. இது சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடிய விஷயம் இல்லை. விரிவான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியது இருக்கிறது என்று உச்சநீதிமன்ற நீதிகள் கருத்து. எட்டு வழி சாலை திட்டத்திற்கான அரசாணை அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பே நிலத்தை பலரிடமிருந்து வாங்கியது எப்படி என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும், திட்டத்திற்கான அனுமதி பெறுவதற்கு முன்பே எப்படி வருவாய் ஆவணங்களில் நிலத்தை எடுத்துக் கொண்டு அதற்கான தரவுகளை சேர்த்தீர்கள் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தனர்.

சென்னை உயர்நீதிமன்ற விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் நீதிபதிகள் மறுத்தனர். மேலும், தமிழக அரசு, மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை, மத்திய சுற்றுச்சூழல் துறை; சேலம், தி.மலை, காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர்கள் உள்ளிட்டோர் 4 வாரத்தில் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜுலை முதல் வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.