Tamilnadu

கலைஞருடைய பிறந்த நாளில் தமிழ் மானம் காப்போம் என்று சூளுரை ஏற்போம் - கி.வீரமணி பேச்சு !

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் 96 வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் தொண்டர்கள் கட்சி தலைவர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். சென்னை மெரினாவில் அவரது நினைவிடத்தில் கட்சி தலைவர்கள் தொண்டர்கள் என மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றார்.

அதனைத் தொடர்ந்து முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் 96 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் கருணாநிதியின் திருவுருவ சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதன்பின்னர் செய்தியாளர்களை கி.வீரமணி சந்தித்து பேட்டியளித்தார். இந்த பேட்டியின் போது, "தன்னுடைய வாழ்வையே ஒரு போராட்டக் களமாக மாற்றிக் கொண்ட கலைஞர் மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் இருக்கிறார். இந்தி எதிர்ப்புக்காக பாளையங்கோட்டை சிறைக்கு சென்று போராடியவர் கலைஞர். மீண்டும் இந்திப் பாம்பு தமிழகத்தில் தலைதூக்குகிறது. தன்னுடைய 14 வயது முதலே தமிழ் கொடிபிடித்து இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தியவர்.

ஆட்சியில் அமர்ந்து இருக்கிறோம் என்கிற ஒரே காரணத்திற்காக இந்தி பாம்பு தலை தூக்குகிறது படம் எடுத்து ஆட நினைக்கிறது. அதனுடைய நச்சுப் பல்லை பிடுங்குவதற்கு கலைஞர் இல்லையே என்று யாரும் கவலைப்பட வேண்டாம். கலைஞரால் செதுக்கப்பட்ட தளபதி ஸ்டாலின் முன்னிலையில் வெறும் போராட்ட களம் உருவாகும்.

இந்தித் திணிப்பு வெறும் அறிக்கை தான் என்று சிலர் சமாதானம் சொல்கிறார்கள். ஆனால் வரும் முன்னர் காப்பது என்பது தான் வள்ளுவர் வழியில் பெரியார் சொன்ன வழிமுறை. அந்த வழியில் கலைஞருடைய 96வது பிறந்த நாளில் தமிழ் மானம் காப்போம் என்று நாம் சூளுரை ஏற்போம்". என அவர் தெரிவித்தார்.