Tamilnadu

தமிழகம் எப்போதும் திராவிட இயக்கத்தின் கோட்டை - வைகோ பெருமிதம் !

நாடு முழுவதும் 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது முடிந்துள்ளது. தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், காலியாக இருந்த 22 சட்டசபைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. மே 19ம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்தது. நாடு முழுவதும் இன்று வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

நாடு முழுவதும் பா.ஜ.க பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், தமிழகத்தில் 38 எம்.பி தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி வேட்பாளர்களே முன்னிலையில் உள்ளனர்.

இதுகுறித்து ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டிளித்தார். அப்போது அவர் கூறுகையில், “மக்களவைத் தேர்தல் முடிவுகளைப் பார்க்கும் பொழுது தமிழகம் எப்போதும் திராவிட இயக்கத்தின் கோட்டை என்பதனை நிரூபித்திருக்கிறது. இதன்மூலம் இந்தியாவிற்கே முன்மாதிரியாக தமிழகம் திகழ்கிறது.

மோடி தனது ஆட்சியின் சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்கவில்லை. அதற்கு மாறாக புல்வாமா, மதவாதம் இவற்றை வைத்தே வாக்கு கேட்டார்.இந்த வெற்றி ஜனநாயகத்திற்கு விடப்பட்ட ஒரு அறைகூவல். மீண்டும் பா.ஜ.க ஆட்சி வந்தால் தமிழகத்திற்கு நியூட்ரினோ,ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்கள் கொண்டுவரப்படும் என்ற கவலை அதிகரிக்கிறது. இப்போது உள்ள இந்த அதிமுக ஆட்சி தள்ளாடிக்கொண்டுள்ளாது. மீண்டும் தேர்தல் வரும்பட்சத்தில் தி.மு.க கூட்டணி நிச்சயம் 200 இடங்களில் வெற்றி வாய்ப்பை அள்ளும்” என்று அவர் தெரிவித்தார்.