Tamilnadu

சுகாதாரமற்ற முறையில் குடிநீர் விநியோகம் : 500 கேன்கள் பறிமுதல்!

கோடை காலம் நெருங்கிய வேளையில் குடிநீர் தேவையும் அதிகரிக்கும். தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மழை குறைவாக பெய்து வருவதால் ஏரிகள் மற்றும் குளங்களில் தண்ணீர் சுத்தமாக வற்றிவிட்டது. மெட்ரோ வாட்டர் பற்றாக்குறையால் 2 நாட்களுக்கு ஒருமுறை விநியோகிக்கப்பட்டுவந்த தண்ணீர் இப்போது 3 நாட்களுக்கு ஒருமுறை தான் விநியோகிக்கப்படுகிறது.

இதானல் மக்கள் தனியார் வாட்டர் நிறுவனங்களிடம் தண்ணீரை வாங்க தொடங்கிவிட்டனர். இதை பயன்படுத்திக்கொண்ட தனியார் வாட்டர் நிறுவனங்கள் சுகாதாரமற்ற தண்ணீரையும், போலியான நிறுவனங்கள் வழங்கும் குடிநீரையும் விநியோகிப்பதாக புகார் எழுந்தது.

இதனையடுத்து உணவு பாதுகாப்புத் துறை சுகாதாரமற்ற முறையில் குடிநீர் உற்பத்தி செய்த 53 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. கோடை காலத்தின் தண்ணீர் தட்டுப்பாட்டை பயன்படுத்தி சுகாதாரமற்ற குடிநீர் விநியோகம் செய்யப்படுகின்றன. தரமற்ற தண்ணீரை உற்பத்தி செய்த நிறுவனங்களுக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சென்னையில் கோயம்பேடு, கொளத்தூர் மற்றும் வேளச்சேரியில் கேன் குடிநீர் நிறுவனங்களில் சோதனை நடைபெற்றது. காலை கோயம்பேடு மேட்ரோ ரயில் நிலையம் அருகே தரமற்ற 500 வாட்டர் கேன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் உணவு பாதுகாப்புத் துறை அலுவலகத்திற்கு விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளன.

தரமற்ற தண்ணீர் கேன்கள் விற்பனை செய்வது குறித்து, 9444042322 என்ற எண்ணில் பொதுமக்கள் புகாரளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
undefined