Tamilnadu

24 மணிநேரத்தில் நல்லக்கண்ணுவுக்கு இலவச வீடு வழங்கவேண்டும் - கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்

சென்னை சி.ஐ.டி. நகரில் உள்ள அரசு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் கடந்த 12 ஆண்டுகளாக வசித்து வந்தார் மூத்த அரசியல் தலைவரும், சுதந்திர போராட்ட தியாகியுமான தோழர் நல்லகண்ணு. திடீரென்று, மாநகராட்சி பணி நடைபெற இருக்கிறது எனக் கூறி வீட்டை காலி செய்ய நோட்டீஸ் விடுத்துள்ளது தமிழக அரசு.

அரசின் நோட்டீஸை ஏற்று வேறு வாடகை வீடு ஒன்றி குடி புகுந்துள்ளார் தோழர் நல்லகண்ணு. இதேபோல், முன்னாள் அமைச்சர் கக்கனின் குடும்பத்தினரையும் தமிழக அரசு அவசரமாக வெளியேறு கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக, அரசியல் தலைவர்கள் மற்றும் இளைஞர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் கக்கனின் மகன் சத்தியநாதனை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே.எஸ்.அழகிரி பேசியதாவது,

நாட்டுக்காக உழைத்த நல்லகண்ணு மற்றும் கக்கனின் குடும்பத்தினர் போன்றோர்களை அரசு வெளியேற்றி இருப்பது கண்டிக்கத்தக்கது. மேலும் இவர்களை போன்ற தியாகிகளை அரசு சிரமப்படுத்தாமல் இருக்க வேண்டும்.

நல்லகண்ணுவுக்கும், கக்கனின் குடும்பத்தாருக்கும் அடுத்த 24 மணிநேரத்தில் வாடகை பெறப்படாத மாற்று இல்லம் வழங்க அரசு ஏற்பாடு செய்யவேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், நாட்டின் சுதந்திரத்துக்காக சிறை சென்றவர்களையும், நாட்டுக்காக உழைத்தவர்களையும் இது போன்று மோசமான நிலைக்கு அரசு தள்ளியுள்ளது என்பது இளைய தலைமுறைக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது எனக் கூறினார்.