Tamilnadu

தமிழகத்தில் மே 19-ம் தேதி மறுவாக்குப்பதிவு!

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 5 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், மே 19-ம் தேதியுடன் தேர்தல் நிறைவடைகிறது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ம் தேதியே அனைத்துத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், தமிழகத்தில் மே 19-ம் தேதி 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், சில பகுதிகளில் நடைபெற்ற வன்முறைகளின் காரணமாக, 10 வாக்குசாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தவேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பரிந்துரை செய்திருந்தார்.

இந்தநிலையில், தமிழகத்தின் 13 வாக்குச்சாவடிகளில் மே 19-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, தருமபுரியில் 8 வாக்குச்சாவடிகளிலும், தேனியில் 2 வாக்குச்சாவடிகளிலும், திருவள்ளூர், கடலூர், ஈரோடு ஆகிய மக்களவைத் தொகுதிகளில் தலா 1 வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது.