Tamilnadu

மெட்ரோ ஊழியர்கள் போராட்டம் - தொடங்கியது முத்தரப்பு பேச்சுவார்த்தை!

மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 8 ஊழியர்கள் விதிகளுக்குப் புறம்பாக பணியாளர் சங்கம் தொடங்கியதாக பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதனைக் கண்டித்து அந்நிறுவன ஊழியர்கள் கோயம்பேடு அலுவலகத்தில் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பணியாளர் சங்கம் அமைத்ததால் பணிநீக்கம் செய்யப்பட்ட 8 ஊழியர்களை பணியில் சேர்க்க வலியுறுத்தியும், சென்னை மெட்ரோ ரயில் சேவையின் பெரும்பாலான பணிகளை ஒப்பந்த அடிப்படையில் வெளி நபருக்கு வழங்குவதை எதிர்த்தும், அதிகநேரம் பணிசெய்யுமாறு கட்டாயப்படுத்துவதை எதிர்த்தும், ஊதிய உயர்வு வேண்டும் எனக் கோரியும் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர்.

மெட்ரோ பணியாளர்கள் போராட்டத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டு பயணிகள் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ஜானகிராமன் தலைமையில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் மற்றும் மெட்ரோ ரயில் ஊழியர்கள் இடையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தை, சென்னை பிராட்வேயில் உள்ள குறளகத்தில் துவங்கியது.

இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் மெட்ரோ ரயில் ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் சிஐடியூ தலைவர் சௌந்தரராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.