Sports
6வது முறையாக U19 உலகக்கோப்பையை வென்ற இந்தியா! ஒரே தொடரில் சாதனை மேல் சாதனை! - முழுவிவரம் உள்ளே
19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஜூனியர் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று (பிப்ரவரி 06) ஜிம்பாப்வேயில் உள்ள ஹாராரேயில் நடைபெற்றது. இதில் இந்தியா ஜூனியர் - இங்கிலாந்து ஜூனியர் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் தொடக்க வீரராக களமிறங்கிய ஆரோன் ஜார்ஜ் அரையிறுதி ஆட்டத்தில் சதம் அடித்திருந்ததால் அவர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. இருப்பினும் 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அவருடன் இணைந்து தொடக்க வீரராக களமிறங்கிய வைபவ் சூர்ய வன்ஷி, இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறவிட்டு வெறும் 55 பந்துகளில் சதம் அடித்து அதிரடி காட்டினார். மொத்தமாக 80 பந்துகளில் 15 பவுண்டரி, 15 சிக்சர்களுடன் 175 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இவருக்கு அடுத்தபடியாக களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ஆயுஷ் மாத்ரே 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து வந்த வீரர்கள், வேதாந்த் திரிவேதி 32 ரன்கள், விஹான் மல்கோத்ரா 30 ரன்கள், அபிக்யான் 40 ரன்கள் என எடுத்தனர். மொத்தமாக 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 411 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது இந்திய அணி.
கடின இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு தொடக்கம் நன்றாக அமைந்தது. ஜோசப் மூர்ஸ் மற்றும் பென் டாக்கின்ஸ் இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஆனால் தமிழ்நாட்டை சேர்ந்த அம்ரிஷ் விக்கெட் எடுத்து இந்த ஜோடியை பிரித்தார். இந்திய அணிக்காக அம்ரிஷ் தனது முதல் விக்கெட்டை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்பின் பென் டாக்கின்ஸ் மற்றும் பென் மேய்ஸ் இணைந்து அணியை மீட்டெடுக்க முயற்சித்தாலும் அது அவர்களுக்கு கைகொடுக்கவில்லை. டாக்கின்ஸ் 66 ரன்களிலும், மேய்ஸ் 45 ரன்களிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர். இந்திய அணி தரப்பில் தமிழ்நாட்டை சேர்ந்த அம்ரிஷ் 3 விக்கெட்டும், மற்றொரு தமிழக வீரரான தீபேஷ் தேவேந்திரன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் இங்கிலாந்து வீரர் பால்கெனர் தனி ஆளாகப் போராடினார். அவர் 67 பந்தில் 115 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். இறுதியில் இங்கிலாந்து 40.2 ஓவரில் 311 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுஅத்துடன், 6வது முறையாக 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஜூனியர் 50 ஓவர் உலகக் கோப்பையையும் கைப்பற்றியது.
தற்போது U19 உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் இந்திய அணிக்கு 7.50 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இருப்பினும் சீனியர் அணி போன்று ஐசிசி சார்பில் எந்த பரிசுத்தொகையும் வழங்கப்படாது.
இறுதிப்போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி பல சாதனைகளை படைத்துள்ளார். 14 வயதே ஆன அவர் 32 பந்துகளில் அரைசதம் கடந்த நிலையில் அடுத்த 13 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்து, 55 பந்துகளில் சதம் விளாசி மிரட்டினார். 19 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இரண்டாவது அதிவேக சதம் இதுதான்.
U19 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு இந்திய வீரரின் அதிவேக சதமாக வைபவ் சூர்யவன்ஷியின் சதம் இடம் பிடித்தது. இதற்கு முன்னர் இந்திய வீரர் ராஜ் அங்கத் பாவா 69 பந்துகளில் சதம் அடித்ததே சாதனையாக இருந்தது. அதனை நேற்று சூர்யவன்ஷி முறியடித்தார்.
இது தவிர, 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பையில் ஒரே தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் என்ற சாதனையையும் வைபவ் சூரியவன்ஷி படைத்தார். பேபி ஏபி என அழைக்கப்படும் தென்னாப்பிரிக்காவின் டெவால்ட் ப்ரேவிஸ் 2022ல் நடந்த U19 உலகக் கோப்பையில் 6 போட்டிகளில் 18 சிக்சர்கள் அடித்திருந்தார். அதனை நேற்று தனது 5 சிக்சரிலேயே சூர்யவன்ஷி முறியடித்தார். அதன்பிறகு 10 சிக்ஸர்கள் என மொத்தம் 15 சிக்சர்கள் சூர்யவன்ஷி அடித்திருந்தார்.
இதன்மூலம் U19 உலகக் கோப்பையில் 30 சிக்சர்கள் அடித்த ஒரே வீரர், உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 15 சிக்சர்கள் அடித்த ஒரே வீரர் ஆகிய சாதனைகளை படைத்தார். U19 கிரிக்கெட்டில் இதுவரை யாருமே செய்யாத சாதனைகள் இது. U19 போட்டிகளிலேயே அதிகபட்சமாக ஒரு போட்டியில் ஒரு வீரர் 14 சிக்ஸர் அடித்ததே அதிகபட்ச வரலாறு. அதனை படைத்ததும் சூர்யவன்ஷி தான். கடந்த டிசம்பர் மாதம் UAE U19 அணிக்கு எதிரான போட்டியில் அவர் அடித்த 14 சிக்சர்களே சாதனையாக இருந்தது. தற்போது தனது சாதனையை தானே முறியடித்து அசத்தியுள்ளார்.
இதுமட்டுமில்லாமல் 71 பந்துகளில் 150 ரன்கள் கடந்து அதிவேகமாக 150 ரன்கள் எடுத்த 19 வயதுக்குட்பட்ட வீரர் என்ற சாதனையையும் சூர்யவன்ஷி படைத்தார். மேலும், U19 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 150 ரன்கள் எடுத்த உலகின் முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
U19 உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியா 6வது முறையாக கோப்பையை வென்றிருக்கிறது. இதற்கு முன்னர் இதன்மூலம் 6 முறை யு19 உலகக்கோப்பையை வென்ற ஒரே அணி இந்தியா மட்டுமே. இதற்கடுத்ததாக ஆஸ்திரேலியா 4 முறை உலகக்கோப்பையை வென்றுள்ளது. கடைசியாக 2022ம் ஆண்டு இந்தியா U19 உலகக்கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை எப்போது தாக்கல்? : சபாநாயகர் அப்பாவு சொன்ன தகவல்!
-
பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக துணை போகும் அதிமுக : மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆர்ப்பாட்டம்!
-
“ஓம் பிர்லாவின் நிழலில் ஒதுங்கிய மோடி..” : பிரதமரை கடுமையாக சாடிய ‘முரசொலி’ !
-
தமிழ்நாட்டின் திட்டங்களுக்கான நிதியை எப்போது விடுவிப்பீர்கள்? கேள்விகளை அடுக்கிய தி.மு.க எம்.பிக்கள்!
-
“வரலாற்றில் இடம்பிடித்த சிலை…மார்க்ஸை வடிவமைக்கும் போது பூரித்தேன்” : நெகிழ்ந்த சிற்பி கார்த்திகேயன்!