Sports

கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் இருந்தால் MTC பேருந்தில் இலவச பயணம்- மாநகர் போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டாவது T20 போட்டியை காணவருபவர்கள் போட்டிக்கான டிக்கெட்டை நடத்துனரிடம் காண்பித்து மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் (குளிர்சாதனபேருந்து நீங்கலாக) கட்டணமின்றி பயணிக்கலாம் என மாநகர் போக்குவரத்துக் கழகம் (MTC) அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், " 25.01.2025 அன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டாவது T20 I கிரிக்கெட் போட்டி சென்னை, MA சிதம்பரம் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிகளை காண ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

25.01.2025 (சனிக்கிழமை) அன்று வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 100 சிறப்பு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இப்போட்டிகளை காணவரும் பார்வையாளர்கள் வசதிக்காகவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும் பொது போக்குவரத்து பயன்பாட்டினை அதிகரிக்கும் விதமாகவும் தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்துடன் (TNCA) மா.போ.கழகம் உரிய பயணக்கட்டணம் பெற்றுக்கொண்டதன் அடிப்படையில் பயணிகள் கிரிக்கெட் போட்டிக்கான Online/pre-printed டிக்கெட் மற்றும் நுழைவுச்சீட்டு வைத்து இருந்தால் அதை நடத்துனரிடம் காண்பித்து மா.போ,கழக பேருந்துகளில் (குளிர்சாதனபேருந்து நீங்கலாக) போட்டி நடைபெறும் நேரத்திற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பும் போட்டி முடிந்த மூன்று மணி நேரத்திற்கு பின்னர் பேருந்துகளில் பயணிக்க கட்டணமின்றி அனுமதிக்கப்படுவார்கள். மேலும், சாதாரண கட்டண பேருந்துகளில் வழக்கம்போல் மகளிர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர்கள் கட்டணமின்றி பயணம் செய்யலாம்.

அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து M.Aசிதம்பரம் கிரிக்கெட் மைதானம் வரை மா.போ.கழக இணைப்பு பேருந்துகள் (Shuttle service) மாலை 4.00 மணி முதல் தொடர்ந்து இயக்கப்பட உள்ளது. எனவே, பார்வையாளர்கள் இப்பேருந்து இயக்கத்தினை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்."என்று கூறப்பட்டுள்ளது.

Also Read: பிரபாகரின் அண்ணன் மகனை தகாத வார்த்தையால் விமர்சித்த சீமான் : பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் !