Sports

இவர்தான் இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார்- தமிழ்நாடு வீரரை புகழ்ந்து பாராட்டிய முன்னாள் இந்திய வீரர்!

உள்நாட்டு தொடர்களில் கலக்கி வந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் அணியில் இடம்பிடித்திருந்தார். அதில் சிறப்பாக செயல்பட்ட அவருக்கு இலங்கையின் கொழும்பு நகரில் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த 5 ஏ அணிகள் பங்கேற்ற எமர்ஜிங் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய ஏ அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது.

அங்கும் தனது திறமையை வெளிப்படுத்திய சாய் சுதர்சன் தொடர்ந்து உள்ளுர் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டார்.இதனால் அவருக்கு தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணியில் வாய்ப்பு வழஙகப்பட்டது.

அதிலும் சிறப்பாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருதினை வென்றார். தற்போது நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 6-ம் இடம் பிடித்தார். எனினும் இந்திய அணியில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், இந்திய அணியின் எதிர்கால சூப்பர் ஸ்டாராக சாய் சுதர்சன் இருப்பார் என முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "ஜெய்ஸ்வாலுடன் துவக்க வீரராக சாய் சுதர்சனை களமிறக்கலாம். இது இந்திய அணியின் எதிர்காலத்துக்கு சிறப்பானதாக அமையும்.

சாய் சுதர்சன் தொடர்ந்து சிறப்பாக ஆடி வருகிறார். அவர் விளையாடி வரும் முறையை பார்க்கும் போது இந்திய அணியின் எதிர்கால சூப்பர் ஸ்டாராக அவர்தான் பேட்டிங் துறையில் இருப்பார் என்று கருதுகிறேன். அவர் மூன்றுவிதமாக போட்டிகளிலும் தொடர்ந்து சிறப்பாக ஆடுகிறார். இதனால் பிசிசிஐ சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு அளிக்கவேண்டும்" என்று கூறியுள்ளார்.

Also Read: படிப்பு, வேலைகளில் அருந்ததியர் சமூகத்தினருக்கு உயர்ந்து வரும் பிரதிநிதித்துவம் - அமைச்சர் மதிவேந்தன்!