Sports
"புது சவால்களை எதிர்கொள்ள காத்திருக்கிறேன்"- 41 வயதில் ஓய்வை அறிவித்த ஜேம்ஸ் ஆண்டர்சன் !
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த அணிக்காக வெற்றிகரமாக ஆடி வருகிறார். டெஸ்ட் போட்டிகளில் 700 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவர் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியில் மூன்றாம் இடத்தில உள்ளார் .
அவருக்கு முன்னதாக முத்தையா முரளிதரன் (800), ஷேன் வார்னே(708) ஆகியோர் மட்டுமே உள்ளனர். அது மட்டுமின்றி அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் அவரே வைத்துள்ளார். தற்போது 41 வயதாகும் ஜேம்ஸ் ஆண்டர்சன் இறுதியாக ஓய்வை அறிவித்துள்ளார்.
ஜூலை 10-ம் தேதி லார்ட்ஸில் வெஸ்ட் இண்டீஸிற்கு எதிராக ஆடும் டெஸ்ட் போட்டியே அவரின் கடைசி போட்டியாக இருக்கவுள்ளது. தனது ஓய்வு முடிவு குறித்து கூறியுள்ள அவர், "வரும் கோடைக்காலத்தில் லார்ட்ஸில் நடைபெறவிருக்கும் முதல் டெஸ்ட் போட்டியோடு நான் ஓய்வு பெறுகிறேன். தேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆடிய இந்த 20 ஆண்டுகளுமே அபாரமானவை. சிறுவயதிலிருந்து நான் விரும்பி நேசித்த ஒரு ஆட்டத்தை ஆடி முடித்திருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இங்கிலாந்து அணிக்காக மைதானத்திற்குள் காலடி எடுத்து வைக்கும் தருணங்களை இனி இழப்பேன் என்றாலும், என்னைப் போலவே தேசத்திற்கு ஆட வேண்டும் என்ற கனவு கொண்ட இளம்வீரர்களுக்கு வழிவிட இதுதான் சரியான நேரம் என நினைக்கிறேன். வாழ்வில் இனி வரப்போகும் புது சவால்களை எதிர்கொள்ள ஆர்வமாகக் காத்திருக்கிறேன்"என்று கூறியுள்ளார்.
சமீப சில மாதங்களாக ஆண்டர்சனின் பார்ம் குறைந்து வந்த நிலையில், அவர் தனது ஓய்வு முடிவை அறிவிக்க வேண்டும் என இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் மெக்கல்லம் வலியுறுத்தியதாக செய்திகள் வெளியாகின. அதனைத் தொடர்ந்தே ஆண்டர்சன் இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
Also Read
-
திருவள்ளுவருக்கு மீண்டும் காவிச் சாயம்... மவுனம் காக்கும் தவெக அரசு; விளாசிய உதயநிதி ஸ்டாலின்!
-
“திருவள்ளுவருக்கு மீண்டும் காவிச் சாயமா?; தவெக அரசு வேடிக்கைப் பார்க்கலாமா?”: ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!
-
சிங்கப்பெண் அதிரடிப்படையில் தேர்வான பெண் காவலருக்கு டார்ச்சர்? - இன்ஸ்பெக்டர் மீது பாலியல் புகார்!
-
”கூடிய ’GenZ DMK’ கொள்கைக் கூட்டம்.. தைரியமாக களமாடுங்கள் திமுக உங்களுடன் என தெம்பூட்டிய கழக சட்டத்துறை”
-
வயிற்று வலியை தீர்க்கும் : கஞ்சா செடி வளர்த்து விற்பனை - தந்தை மகன் கைது!